Published : 23 Feb 2019 09:52 AM
Last Updated : 23 Feb 2019 09:52 AM

உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு தெலங்கானா அரசு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

புல்வாமா பகுதியில் தீவிரவாதியின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக் நேற்று நடைபெற்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் அறிவித்தார். தெலங்கானா மாநில இடைக்கால பட்ஜெட்டை நேற்று முதல்வரும், நிதி அமைச்சருமான கே. சந்திரசேகர ராவ் தாக்கல் செய்தார். ரூ. 1,82,017 கோடியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, புல்வாமா பகுதியில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் பேசியதாவது:புல்வாமாவில் நமது ராணுவ வீரர்களின் மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை, நம் நாட்டின் மீது நடந்ததாகவே கருத வேண்டும். இதனை நாடு முழுவதும் தீவிரமாக கண்டிக்கின்றனர். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு நாம் இரக்கம் காட்டுவதை விட, இந்தியர்கள் அனைவரும் இந்த சம்பவத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிப்பதோடு, ராணுவத்துக்கு நமது ஆதரவையும் பலமாக தெரிவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் தெலங்கானா அரசு உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், இடைக்கால பட்ஜெட்டில் தொடர்ந்து 24 மணி நேர மின்சாரம் வழங்குவதாக சந்திரசேகர ராவ் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், முதியோர், விதவைகள், கணவர், பிள்ளைகளால் கைவிடப்பட்டு தனியாக வசிக்கும் பெண்கள், எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோருக்கான மாத உதவி தொகை ரூ. 1000 லிருந்து ரூ 2,116 ஆக உயர்த்தப்பட்டது. மேலும், முதியோர் உதவித்தொகை பெறும் வயது உச்ச வரம்பு 60லிருந்து 57 ஆக குறைக்கப்பட்டது. வேலை இல்லா இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்க ரூ. 1,810 கோடியும், விவசாய வங்கிக் கடன் தள்ளுபடிக்காக ரூ. 6 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கே. சந்திரசேகர ராவ் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x