Published : 27 Feb 2019 06:47 PM
Last Updated : 27 Feb 2019 06:47 PM

பாகிஸ்தான் நடத்திய விமானத் தாக்குதல்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் விமானம் இன்று நடத்திய தாக்குதலை தடுத்து  நிறுத்தியபோது, அந்நாடடு ராணுவத்திடம் இந்திய விமானி சிக்கியுள்ள நிலையில், இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  நேற்று  தாக்குதல் நடத்தி அழித்தன. இதில் பாலகோட், சாக்கோட்,  முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது.  இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது.

இதனை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்தது. இந்திய விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் ஒரு விமானத்தை சுட்டுவீழ்த்தியதாகவும், அதில் இருந்த விமானி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ‘‘இன்று அதிகாலை இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய தரப்பில் மிக் 27 ரக விமானங்கள் பதில் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன.

துரதிருஷ்டவசமாக நமது விமானம் ஒன்று இந்த தாக்குதலில் வீழ்த்தப்பட்டுள்ளது. அதில் இருந்த விமான இன்னமும் திரும்பவில்லை. இந்திய விமானத்தை வீழ்த்தியதாகக் கூறும் பாகிஸ்தான் அதிலிருந்த விமானி கைது செய்துள்ளதாகக் கூறியுள்ளது. உண்மையை கண்டறியும் முயற்சியில் உள்ளோம்’’ எனக் கூறினார்.

தாங்கள் கைது செய்ததாக பாகிஸ்தான் கூறும் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி மத்திய அரசு விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் முப்படை வீரர்கள், உளவுப்பிரிவு தலைவர்கள், மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தியா தரப்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x