Published : 28 Feb 2019 01:52 PM
Last Updated : 28 Feb 2019 01:52 PM

‘‘மத்தியஸ்தம் செய்து பதற்றத்தை தணிக்க தயார்’’ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் அறிவிப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் விரைவில் முடிவுக்கும் வரும், இருநாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருக்கிறோம் என அதிபர் ட்ரம்ப் திடீரென அறிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தி அழித்தன. இதில் பாலகோட், சாக்கோட்,  முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது.  இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது.  அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் உயிருடன் கைது செய்துள்ளது.

இருநாடுகள் இடையே பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில் அதனை தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் இறங்கியுள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இதுதொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாட்டை கடைபிடித்து அமைதி நிலவ முன்வர வேண்டும் என அந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இந்தநிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க வியட்நாம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘இந்தியா - பாகிஸ்தான்  இடையே தற்போது நிலவும் மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். இருநாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்து உதவி செய்ய தயாராக இருக்கிறோம். அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ எனக் கூறினார்.   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x