Published : 27 Feb 2019 06:03 PM
Last Updated : 27 Feb 2019 06:03 PM

அபிநந்தனிடம் பாகிஸ்தான் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும்: ஒவைசி வேண்டுகோள்

 

 

இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விஷயத்தில் பாகிஸ்தான் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்று  ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் நேற்று (பிப் 27) தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இன்று காலை, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது.

 

எல்லையில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்து விவரித்த வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை உறுதி செய்துள்ளார்.

 

இதனிடையே சமூக வலைதளங்களில்  வீடியோ வைரலாகி வருகிறது. அதில், கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறம் கட்டப்பட்ட நபர் ஒருவர், எனது பெயர் அபிநந்தன். நான் இந்திய விமானப்படையின் விமானி. எனது சர்வீஸ் எண்  27981, எனது மதம் இந்து என்று கூறுகிறார். வீடியோ வைரலானதை அடுத்து, விமானி அபிநந்தனை இந்தியாவுக்குப் பத்திரமாக அழைத்துவர வேண்டும் என்று குரல்கள் எழுந்துவருகின்றன. இதுதொடர்பான ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

 

இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, ''இந்த கடினமான நேரத்தில் தைரியமான விமானப் படை விமானி அபிநந்தன் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய பிரார்த்தனைகள். ஜெனீவா ஒப்பந்தத்தின் ஆர்ட்டிகிள் 3-ன் படி, ஒவ்வோர் அரசும் கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்தவேண்டும்.

 

இந்திய விமானப் படையின் விமானி அபிநந்தன் விவகாரத்தில் ஜெனீவா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கடைப்பிடிக்கவேண்டும்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x