Last Updated : 25 Feb, 2019 01:12 PM

 

Published : 25 Feb 2019 01:12 PM
Last Updated : 25 Feb 2019 01:12 PM

விவசாயிகளை சமாதானப்படுத்த வாக்குக்கு லஞ்சம் திட்டம்: மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

விவசாயிகளை சமாதானப்படுத்தும் நோக்கில் நிதியுதவி திட்டத்தின் மூலம் வாக்குக்கு லஞ்சம் கொடுப்பது, பாஜகவின் நம்பிக்கையற்ற முயற்சியைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்காக ‘பிரதம மந்திரி விவசாய நலநிதி' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி, 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் குறு சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த உதவித்தொகை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும். இதன்மூலம் நாடு முழுவதும் 12 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் வருகிற மார்ச் 31-ம் தேதி வரை கணக்கிட்டு முதல் தவணை யாக ரூ.2,000 நிதியுதவியை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் கோரக் பூரில் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்றும் கடுமையாக ட்விட்டரில் விமர்சித்திருந்த நிலையில் இன்றும் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,  " வாக்குக்கு லஞ்சம் அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். தேசத்தின் விவசாயிகளை கடனிலும், கடுமையான வேதனையிலும் தள்ளிவிட்டு, நம்பிக்கையற்று சமாதானப்படுத்தும் முயற்சியில் குடும்பத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.17 மட்டும் வழங்குகிறது. 

கட்டுமானத்துறைக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஞானம் எங்கிருந்தது? பன்மடங்குடன் கூடிய அதிக வரி இருக்கிறது என்று நாங்கள் கூறினோம். ஜிஎஸ்டி வரியை கேலிக்கூத்தாக மாற்றிவிட்டார்கள் " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x