Published : 17 Feb 2019 03:24 PM
Last Updated : 17 Feb 2019 03:24 PM
புல்வாமா தாக்குதலால் மக்கள் நெஞ்சில் மட்டுமல்ல, என் நெஞ்சிலும் நெருப்பு கொளுந்து விட்டு எரிகிறது என பிரதமர் மோடி பேசினார்.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு இருதினங்களுக்கு முன்பு துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.
இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தால் நாடுமுழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து நேற்று பேசிய பிரதமர் மோடி, ‘‘காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் மிக மோசமான செயலைச் செய்து விட்டார்கள். நாடு முழுவதுமே கடும் சோகத்தால் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.வீரர்களின் தியாகம் வீண் போகாது. ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் தலைவிதி இனிமேல் ராணுவத்தால் தீர்மானிக்கப்படும்’’ எனக் கூறினார்.
இந்தநிலையில் பிஹார் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார். எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும் திட்டம் மற்றும் பாட்னா நகருக்கான புதிய மெட்ரோ ரெயில் சேவை திட்டம் உள்பட சுமார் 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்தநிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் சின்ஹா, ரத்தன் குமார் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகமோசமான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர். புல்வாமா தாக்குதலால் உங்கள் நெஞ்சில் கொந்தளிக்கும் நெருப்பு என்னுடைய இதயத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது. தீவிரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT