Published : 09 Feb 2019 04:15 PM
Last Updated : 09 Feb 2019 04:15 PM

மம்தா அடுத்த அதிரடி: சிபிஐ நாகேஸ்வர ராவின் மனைவி பணப் பரிமாற்றம் செய்த நிறுவனத்தில் கொல்கத்தா காவல்துறை திடீர் ரெய்டு

முன்னாள் சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவின் மனைவி பணப் பரிமாற்றம் செய்த நிறுவனத்தில் கொல்கத்தா காவல்துறை ரெய்டு நடத்தியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள வங்கி அல்லாத நிதி நிறுவனம் அங்கேலா மெர்கன்டைல் பிரைவேட் லிமிடெட்.  இதன் இரண்டு அலுவலகங்களில் கொல்கத்தா காவல்துறை ரெய்டு நடத்தியுள்ளது. சால்ட் லேக் மற்றும் டால்ஹவுசி பகுதியில் உள்ள இரண்டு இடங்களில் ரெய்டு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.

இதுகுறித்துக் கூறிய கொல்கத்தா காவல்துறை, சட்ட விதிகளின்படி அகர்வால் தன்னுடைய நிறுவனத்தைப் பதிவு செய்யவில்லை என்று தெரிவித்தது.

''இந்த நிறுவனத்தின் சொந்தக்காரர் பிரவீன் அகர்வால் தன்னுடைய நீண்ட நாள் குடும்ப நண்பர்'' என கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி நாகேஸ்வர் ராவ் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, நாகேஸ்வர் ராவ் வெளியிட்ட அறிக்கையில், ''என்னுடைய மனைவி மன்னெம் சந்தியா, அகர்வாலின் நிறுவனத்தில் 2010-ம் ஆண்டு ரூ.25 லட்சம் கடன் பெற்றார். குண்டூரில் ஒரு சொத்தை வாங்க அந்தப் பணம் பயன்பட்டது. வட்டியோடு பணம் திரும்பச் செலுத்தப்பட்டது'' என்று தெரிவித்திருந்தார்.

சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகளுக்கும் கொல்கத்தா போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் தர்ணா போராட்டத்தை நடத்தினார். பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் சட்டவிரோதமாக மாநிலத்தைக் கைப்பற்ற முயல்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்தார். இதனிடையே ராஜீவ் குமாரைக் கைது செய்யக்கூடாது; நேரில் விசாரியுங்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தர்ணாவைக் கைவிட்டார் மம்தா.

இந்நிலையில்  சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவின் மனைவி பணப் பரிமாற்றம் செய்த நிறுவனத்தில் கொல்கத்தா காவல்துறை ரெய்டு நடத்தியது பலரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x