Published : 25 Feb 2019 08:18 PM
Last Updated : 25 Feb 2019 08:18 PM
டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
டெல்லியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் முதலாம் உலகப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கான போர் நினைவுச் சின்னமாக கட்டப்பட்டது. இங்கு, அமர்ஜவான் ஜோதி என்ற பெயரில் 1971-ம் ஆண்டு முதல் அணையா ஜோதி எரிந்து கொண்டிருக்கிறது.
இதை விரிவுபடுத்தி, பிரமாண்ட அளவில் போர் நினைவுச் சின்னம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘‘கடந்த 2014-ம் ஆண்டில் எங்கள் ஆட்சி அமைந்த பின்னர் இதற்கான பணிகள் தொடங்கி இந்த போர் நினைவுச் சின்னம் திறக்கப்படுகிறது. இதை புல்வாமாவில் உயிரிழந்த வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்’’ என குறிப்பிட்டார்.
போர் நினைவுச் சின்னத்தை விரிவுபடுத்தி, புதுப்பித்து பிரமாண்டமாக உருவாக்க வேண்டும் என இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே 1962-ல் நடந்த போருக்குப் பின் கோரிக்கை எழுந்தது. எனினும் நீண்டகாலமாக இந்த கோரிக்கை நிலுவையில் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த 1999-ல் நடந்த கார்கில் போருக்கு பிறகு மேலும் வலுப்பெற்றது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் புதுப்பொலிவுடன் போர் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, பாஜக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT