Published : 18 Jan 2019 07:20 PM
Last Updated : 18 Jan 2019 07:20 PM

விமானப் பாதுகாப்புத் துறையின் தலைவரானார் ராகேஷ் அஸ்தானா: மத்திய அரசு உத்தரவு

சிபிஐயின் இணை இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, விமானப் பாதுகாப்புத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

 

சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா, இணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் ஒருவொருக்கு ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு கூறி மோதல் போக்கு கடந்த ஆண்டு உச்சக்கட்டத்தை எட்டியது. இதனால், இரு உயரதிகாரிகளையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்தது.

 

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அலோக் குமார் வர்மா மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அலோக் குமாருக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை ரத்து செய்ததுடன், அவருக்கு மீண்டும் பொறுப்பை வழங்கியது.

 

மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய உயர்நிலைக் குழு, அலோக் குமார் வர்மாவை, சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து மாற்றியது. தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை தலைமை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார். எனினும், அப்பதவியை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

 

இது சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில், சிபிஐ இணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவை சிபிஐ அமைப்பில் இருந்து மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து ராகேஷ் அஸ்தானா, விமான பாதுகாப்புத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ''சிபிஐயில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ராகேஷ் அஸ்தானா, விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறையின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

 

இவரின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அலோக் வர்மாவை நீக்கியது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அஸ்தானா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x