Published : 03 Jan 2019 07:42 AM
Last Updated : 03 Jan 2019 07:42 AM

சபரிமலையில் செய்தி சேகரிக்க தவறிய ஜனம் டிவி

கேரளாவில் பாஜகவுக்கு ‘ஜனம்’ என்னும் பெயரில் செய்தித் தொலைக்காட்சி உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, இந்த டிவியின் செய்தியாளர்கள் சபரிமலையில் முகாமிட்டு உடனுக்குடன் தகவல் வழங்கி வந்தனர்.

பாஜக, இந்துத்துவா ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் இந்த டிவியின் மூலம் பெண்களின் வருகை பற்றிய தகவலை அறிந்து போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் இதன் செய்தியாளர்கள், நேற்று 2 பெண்கள் ஐயப்பன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த தகவலை வெளியிட தவறிவிட்டனர்.

இதனால் சபரிமலையை சுற்றிலும் இருந்த போராட்டக்காரர்களுக்கு இவர்கள் வருகை தெரியவில்லை.

பாதியில் திரும்பிய பக்தர்கள்..

திருவனந்தபுரம் மாவட்டம், நெய்யாற்றங்கரையைச் சேர்ந்த பாபு, சுனில், சுபாஷ், அனில் ஆகியோர் தங்கள் ஊரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரம் நடந்தே சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தனர். எருமேலி தர்மசாஸ்தா கோவிலுக்கு சென்றபோது, இளம் பெண்கள் தரிசனம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருமுடிகட்டு, மாலையை அவிழ்த்து வைத்துவிட்டு, சபரிமலைக்கு செல்லாமலேயே ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

குடும்பத்தினர் எதிர்ப்பு

சபரிமலைக்கு சென்ற கனகதுர்காவின் சகோதரர் பரத்பூஷன் கூறும்போது, “என் அக்கா கோயிலுக்கு சென்றதில் எங்கள் குடும்பத்தினருக்கு உடன்பாடு இல்லை. அரசும், கோட்டயம் எஸ்.பியும்தான் அவர் கோயிலுக்கு செல்ல காரணம்” என்றார்.

இன்று முழு அடைப்பு

சபரிமலைக்கு இளம் பெண்களை போலீஸார் அழைத்துச் சென்றதைக் கண்டித்து சபரிமலை கர்ம சமிதி அமைப்பின் சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, காங்கிரஸ் சார்பில் இன்று கருப்பு தினம் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடை அடைப்புக்கு ஆதரவில்லை என கேரள வணிகர்கள் சங்கத் தலைவர் நஸ்ருதீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள டிஜிபி லோக்நாத் பெகரா கூறும்போது “போராட்டத்தின்போது பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அதற்கான இழப்பீடும் அவர்களிடம் இருந்து அபராதமாக வசூலிக்கப்படும். கைது நடவடிக்கையும் எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x