Published : 14 Dec 2018 11:30 AM
Last Updated : 14 Dec 2018 11:30 AM
பிரான்ஸில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் எந்தவிதமான சந்தேகமும் இருப்பதாக கருதவில்லை என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், விசாரணை கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் ரூ.58 ஆயிரம் கோடிக்கு அதிகமாக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும்; விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற பொதுநலன் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர்.
விசாரணையின்போது, ரஃபேல் விமானம் தொடர்பான விலை உள்ளிட்ட விவரங்களை மூடி சீலிடப்பட்ட கவரில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதேசமயம், ரஃபேல் போர் விமானத்தின் விலையை வெளிப்படையாக வெளியிடுவது என்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று விலை விவரங்களைத் தெரிவிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இருதரப்பு வாதங்கள் முடிந்தநிலையில், தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து.
இதன்படி இன்று இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோஸப் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில், “ பிரான்ஸின் டஸால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் எந்தவிதமான சந்தேகமும் நீதிமன்றத்துக்கு இல்லை.
நம்முடைய நாட்டுக்கு போர்விமானங்கள் என்பது அவசியமான ஒன்று, அதுபோன்ற விமானங்கள் இல்லாமல் நாடு இருக்க முடியாது. ஆதலால், இந்த ரஃபேல் போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்த எந்தக் காரணமும் இல்லை. மேலும், போர்விமானங்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து விசாரிப்பது நீதிமன்றத்தின் பணி அல்ல.
ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடு இருப்பதாகத் தெரியவில்லை. ஆதலால், ரஃபேல் போர்விமானங்கள் கொள்முதலில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை, விசாரணை கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்கிறோம்’’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT