Published : 31 Dec 2018 08:35 AM
Last Updated : 31 Dec 2018 08:35 AM
மாநிலங்களவையில் முத்தலாக் தடை திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
முஸ்லிம் சமூகத்தில் பின்பற்றப்படும் முத்தலாக் விவாகரத்து நடைமுறை சட்டவிரோதம் என்று கடந்த ஆண்டு ஆகஸ்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) சட்ட மசோதா கடந்த டிசம்பரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் ஆளும் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் அந்த அவையில் மசோதா முடங்கியது.
இதனிடையே முத்தலாக் தடையை அமல் செய்ய கடந்த செப்டம்பரில் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதன்பின் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று முத்தலாக் தடை மசோதாவில் 3 முக்கிய திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது.
திருத்தப்பட்ட மசோதா கடந்த 17-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 27-ம் தேதி நீண்ட விவாதத்துக்குப் பிறகு 245 எம்.பி.க்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது காங்கிரஸ், அதிமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து முத்தலாக் தடை திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ஆளும் பாஜக, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை தங்கள் கட்சி எம்.பி.க்கள் கண்டிப்பாக அவையில் ஆஜராக வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.
"மாநிலங்களவையில் முத்தலாக் தடை திருத்த மசோதா நிறைவேற்றப்படும்" என்று மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். இப்போதைய நிலையில் மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம்" என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT