Published : 10 Dec 2018 08:46 AM
Last Updated : 10 Dec 2018 08:46 AM

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: பஞ்சாப் முதல்வருக்கு ராகுல் காந்தி கடிதம்

நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறை வேற்ற வலியுறுத்தி, பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நாடாளு மன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண் டும் என வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்குக்கும் ராகுல் காந்தி ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளன. எனவே, இந்த மசோதாவுக்கான காங்கிரஸ் கட்சியின் ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில், பஞ்சாப் சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இதுபோல, காங்கிரஸ் ஆட்சி யில் உள்ள மாநிலங்களுக்கும் ராகுல் காந்தி இதுபோன்ற கடிதத்தை எழுதி உள்ளார். மேலும், அனைத்து மாநில அரசுகளுக்கு மகளிர் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கடந்த நவம்பர் 23-ம் தேதி கடிதம் எழுதி இருந்தார்.

இதன்படி, ஒடிஷா மற்றும் ஆந்திரா ஆகிய மாநில சட்டப் பேரவைகளில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x