Last Updated : 28 Nov, 2018 01:00 PM

 

Published : 28 Nov 2018 01:00 PM
Last Updated : 28 Nov 2018 01:00 PM

காஷ்மீர் பத்திரிகையாளர் சுஜாத் புகாரியைக் கொன்ற தீவிரவாதி நவீத் ஜாட் என்கவுன்ட்டரில் கொலை

காஷ்மீரில் ரைஸிங் காஷ்மீர் நாளேட்டின் பத்திரிகை ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான சுஜாத் புகாரியை சுட்டுக்கொலை செய்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி நவீத் ஜாட் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

'தி இந்து' (ஆங்கிலம்) நாளேட்டின் முன்னாள் செய்தியாளர் சுஜாத் புகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் ரைஸிங் காஷ்மீர் நாளேட்டின் பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரி. இவர் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி ஸ்ரீநகரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து லால் சவுக்கில் நடைபெறும் இப்தார் விருந்துக்கு புகாரி காரில் புறப்பட்டார்.

அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினர். இதில் நாளேட்டின் ஆசிரியர் புகாரி, அவரின் தனிப் பாதுகாவலர், டிரைவர் ஆகியோர் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் புகாரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதற்கிடையே லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி நவீத் ஜாட் என்ற அபு ஹசுனுல்லாவை போலீஸார் கைது செய்தனர். அவர் கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸாரை சுட்டுவிட்டுத் தப்பினார். இதில் இரு போலீஸார் உயிரிழந்தனர். பத்திரிகையாளர் சுஜாத் புகாரியைக் கொலை செய்தது தீவிரவாதி நவீத் ஜாட்தான் என்பதை உறுதி செய்த போலீஸார் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், பாத்கம் மாவட்டத்தில் உள்ள குத்போரா கிராமத்தில் தீவிரவாதி நவீத் ஜாட் உள்ளிட்ட தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் இன்று அதிகாலை திடீர் ரெய்டு நடத்தினார்கள். அப்போது போலீஸாரைப் பார்த்ததும் தீவிரவாதிகள் இருவரும் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது, அப்போது, போலீஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் நவீத் ஜாட் உள்பட இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர். ஆனால், இது குறித்து இன்னும் காஷ்மீர் போலீஸார் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இதில் தீவிரவாதி நவீத் ஜாட் பாகிஸ்தானின் முல்தான் நகரைச் சேர்ந்தவர். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவராக வலம் வந்தார். இவரை போலீஸார் சுட்டுக்கொன்றது, தீவிரவாத ஒழிப்பில் போலீஸாரின் ஆப்ரேஷனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x