Published : 20 Nov 2018 05:43 PM
Last Updated : 20 Nov 2018 05:43 PM
உ.பியின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் காஷ்மீர் இடம்பெறாத இந்திய வரைபட பதாகையால் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதற்காக, அதன் ஒரு பேராசிரியர் உட்பட மூவரிடம் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய பல்கலைகழகமான இதில், மாணவர்களுக்கான கலை, கலாச்சார நடவடிக்கைகளுக்காக பொதுக் கல்வி மையம் செயல்படுகிறது. இதன் நாடகப் பிரிவின் தலைவராக விபா சர்மா எனும் ஆங்கிலத்துறையின் இணைப் பேராசிரியரும், செயலாளராக மாணவி ரஸியா கானும் உள்ளனர்.
இந்நிலையில், அஸ்கர் வஜாஹித் எனும் நாடகக் கலைஞரின் ’ஜிஸ் லாகூர் நய் தேக்யா(லாகூரைப் பார்க்காதவர்கள்)’ எனும் நாடக அறிவிப்பு வெளியானது. நேற்று நடைபெற இருந்த பிரிவினை மீதான இந்த நாடகத்தின் பெரிய அளவிலான பதாகையில் இந்திய வரைபடம் இருந்தது.
இந்த வரைபடத்தில் காஷ்மீர் பாகிஸ்தானிலும், அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதி சீனாவிலும் காட்டப்பட்டிருந்தது. இதை கண்டு பாஜகவின் அலிகர் பிராந்தியத் துணைத் தலைவரான மான்வேந்தர் பிரதாப் சிங் அதிர்ச்சி அடைந்தார்.
இவர், அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் தாரீக் மன்சூருக்கு புகார் கடிதம் எழுதினார். இதையடுத்து அந்த பதாகை அகற்றப்பட்டதுடன், சம்பவத்தின் காரணம் மீது விபா சர்மா, ரஸியா உள்ளிட்ட மூவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 1980 ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட அஸ்கரின் இந்த நாடகம் மிகவும் பிரபலமானது. அலிகர் முஸ்லிம் பல்கலையில் பலமுறை நடைபெற்று பெரும் வரவேற்பை பெற்ற நாடகத்தின் பதாகையால் கிளம்பிய சர்ச்சை காரணமாக இந்தமுறை ரத்து செய்யப்பட்டு விட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT