Published : 19 Nov 2018 05:13 PM
Last Updated : 19 Nov 2018 05:13 PM
கர்நாடக மாநிலத்தில் திருமணத்தை முடித்த கையோடு மணக்கோலத்திலேயே மணப் பெண் ஸ்வேதா தேர்வெழுதி உள்ளார்.
கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா. இவர் மைசூரு பல்கலைக் கழகத்தில் கடைசி ஆண்டு சட்டப் படிப்பு படித்து வந்தார். மே 6-ம் தேதி நிச்சயம் நடந்த இவருக்கு நவம்பர் 18-ம் தேதி திருமணம் என்று முடிவானது.
அதற்கு முன்னதாகவே பல்கலைக் கழகத் தேர்வுகள் முடிவதாக இருந்தன. ஆனால் எதிர்பாராத விதமாக அறிவிக்கப்பட்ட மாண்டியா மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலால் தேர்வு 18-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.45 முதல் 8.45 முகூர்த்தத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முடித்த கையோடு உடனடியாக தேர்வு மையத்துக்குச் சென்ற ஸ்வேதா, தேர்வை எழுதி முடித்தார். அவருடன் கணவரும் இரு வீட்டாரும் உடன் சென்று, வெளியில் காத்திருந்தனர்.
இதுகுறித்துப் பேசிய ஸ்வேதா, ''தேர்வுக்காக நான் நன்றாகப் படித்திருந்தேன். இந்த வாய்ப்பை இழக்க விரும்பாததால், தேர்வை எழுத முடிவெடுத்தேன். என் முடிவுக்கு பெற்றோரும், கணவன் வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
திருமண நாளில் தேர்வெழுதியது புதிய அனுபவமாக இருந்தது. நிச்சயம் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறுவேன்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT