Published : 19 Nov 2018 05:54 PM
Last Updated : 19 Nov 2018 05:54 PM
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன், பிரதமர் மோடியை ஒப்பிடாதீர்கள். பணமதிப்பிழப்பு போன்ற துக்ளக் முடிவுகளை ஒருபோதும் இந்திரா காந்தி எடுத்ததில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து இந்திரா காந்தி-ஏ லைப் இன் நேச்சர் என்ற தலைப்பில் புத்தகத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடந்தது. காங்கிரஸ்முன்னாள் தலைவர் சோனியா காந்தி இந்தப் புத்தகத்தை வெளியிட்டார்
இந்த நிகழ்ச்சியில் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:
இந்திரா காந்தியை ஒருபோதும் பிரதமர் மோடியுடன் ஒப்பிடாதீர்கள். இருவரும் வேறுபட்டவர்கள். இருவரையும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது. பணமதிப்பிழப்பு போன்ற துக்ளக் முடிவுகளை ஒருபோதும் இந்திரா காந்தி எடுத்ததில்லை.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2 ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக அரசு தெரிவிக்கிறது.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பு ஏற்றதில் இருந்து, நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் வலுவிழிந்துவிட்டன், சுற்றுச்சூழல்துறை அமைச்சகமும் பலவீனமடைந்துவிட்டது.
ஆனால், மோடியே தன்னை மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாவலர், மிகப்பெரிய சாம்பியன் என்றுகூறிவருகிறார். ஐக்கிய நாடுகளில் இருந்து விருதும் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உள்நாட்டில் இருக்கும் கதையே வேறு.
மத்திய அரசின் செயல்பாடுகளால் சூழல் நடுநிலைமை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. எளிதாகத் தொழில் செய்வதற்கு ஏற்றதாக நாட்டை மாற்ற வேண்டும் என்பதற்காக, சுற்றுச்சூழல் சட்டங்கள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் போன்றவை திட்டமிட்டு வலுவிழக்கச் செய்யப்படுகின்றன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நாட்டின் விலைமதிப்பில்லாத இயற்கையையும், உயிர்சூழியிலையும் மத்திய அரசு ஆபத்துக்குள்ளாக்குகிறது.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT