Published : 19 Nov 2018 03:22 PM
Last Updated : 19 Nov 2018 03:22 PM

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி தேவசம்போர்டு உச்ச நீதிமன்றத்தில் மனு

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை அமல்படுத்த, கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்ட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையி லான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து அமைப் பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.

இந்தநிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. அப்போது, பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் மற்றும் அவரது சக ஆர்வலர்களும் சபரிமலை செல்ல, புனேயில் இருந்து கொச்சி வந்தனர். விமான நிலையத்தைவிட்டு வெளியே வரவிடாமல், பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டதால் சபரிமலை செல்லாமல் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

சுமார் இரண்டு மாதகாலம், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசன காலத்தில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டால் போராட்டத்தால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தீர்ப்பை அமல்படுத்த கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்தது.

அதன்படி உச்ச நீதிமன்றத்தில் இன்று திருவாங்கூர் தேவசம்போர்டு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மண்டலபூஜை வழிபாட்டை அமைதியாக நடத்தும் நோக்கில் உடனடியாக தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன, தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் காலஅவகாசம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x