Published : 30 Oct 2018 01:46 PM
Last Updated : 30 Oct 2018 01:46 PM

தமிழகத்தில் தீபாவளியன்று காலையில் பட்டாசு: தமிழக அரசு முடிவு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

தீபாவளியன்று அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரை பட்டாசு வெடிப்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும், அதிக ஒலி எழுப்பும் வகையிலான பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும், எந்த வகையிலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படக்கூடாது என சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.

தீபாவளி பண்டிகையின்போது அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரை தமிழகத்தில் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கி அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் பி.வினோத் கண்ணா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அப்போது தமிழக அரசின் சார்பில், ‘‘தீபாவளி பண்டிகை என்பது ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை தமிழகத்தில் அதிகாலை வேளையில் தொடங்கி காலை நேரங்களிலேயே கொண்டாடப் பட்டு வருகிறது. ஆனால் வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை மாலை நேரங்களில் கொண்டாடப் படுகிறது.

எனவே தீபாவளி பண்டிகையின்போது தமிழக மக்களின் கலாச்சார ரீதியாக அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரை யிலும் க 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதியளிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் வினோத் கன்னா, ஆஜரனார். அப்போது நிதிபதிகள் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். ‘‘தமிழகத்திலும் 2 மணிநேரமே பட்டாசு வெடிக்கலாம். எந்த 2 மணிநேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x