Last Updated : 12 Oct, 2018 08:39 AM

 

Published : 12 Oct 2018 08:39 AM
Last Updated : 12 Oct 2018 08:39 AM

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்; தேவசம் போர்டு அமைச்சர் வீடு முற்றுகை: போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீச்சால் பதற்றம்

கேரள தேவசம் போர்டு அமைச்சர் வீட்டை யுவமோர்ச்சா அமைப்பினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கும்பலைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மாநில பாஜக, காங்கிரஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று ஆளும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி விட்டது. இதனால் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

இந்நிலையில், திருவனந்த புரத்தில் உள்ள தேவசம் போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் வீட்டை நோக்கி நேற்று யுவமோர்ச்சா அமைப்பினர் பேரணி நடத்தினர். இதையடுத்து அமைச்சரின் வீட்டில் இருந்து சில மீட்டர் தூரத்தில் போலீஸார் தடுப்புகள் அமைத்திருந்தனர். அவற்றை உடைத்துக் கொண்டு யுவமோர்ச்சாவினர் வீட்டுக்குள் நுழைய முயற்சித்தனர்.

அப்போது சிலர் வன்முறை யிலும் ஈடுபட்டனர். இதையடுத்து யுவமோர்ச்சாவினர் மீது போலீ ஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அப்போதும் கும்பல் கலையாத தால், கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதற்கிடையில், ஆளும் இடது சாரி ஜனநாயக கூட்டணியின் (எல்டிஎப்) அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவ காரம் உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜயராகவன் பத்திரிகை யாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கேரளாவில் இடதுசாரி ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, எதிர்க்கட்சியினர் போராட்டங்கள் நடத்துவது தெளிவாக தெரிகிறது.

கடும் மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட கேரளாவில் நிவாரணப் பணிகளை வெற்றிகரமாக இடதுசாரி கூட்டணி அரசு நடத்தி பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் வேண்டுமென்றே பாஜக.வினரும் காங்கிரஸாரும் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். மாநில அரசை தாக்குவதற்கான ஆயுதமான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

தீர்ப்பை மாநில அரசு நிரா கரிக்க முடியாது. அந்தத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. இந்த விஷ யத்தை மக்களிடம் விளக்கிக் கூறி வருகிறோம். இவ்வாறு விஜயராகவன் கூறினார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x