Published : 20 Oct 2018 09:01 AM
Last Updated : 20 Oct 2018 09:01 AM
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளான நேற்று யானைகள் சவாரி ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. 72 குழுவினரின் கலை நிகழ்ச்சிகளை லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர். விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் போரில் வென்றதை கொண்டாடும் வகையில் கிபி 1610-ம் ஆண்டில் தசரா விழா தொடங்கினார். பின்னர் மைசூரு உடையார் மன்னர்களால் நவராத்திரி விழா காலத்தில் தசரா விழா, 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பிறகு, கடந்த 1972-ம் ஆண்டு முதல் கர்நாடக அரசின் சார்பில் மைசூரு தசரா மாநில பாரம்பரிய விழாவாக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இந்த நிலையில் 408- வது ஆண்டு தசரா விழாவை எழுத்தாளரும், இன்போசிஸ் அறக்கட்டளை தலைவருமான சுதா மூர்த்தி கடந்த 10-ம் தேதி தொடங்கி வைத்தார். மைசூரு மன்னர் குடும்பத்தின் குல தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் மகிஷா சூரனை வீழ்த்தியதை நினைவுகூரும் வகையில் சுதா மூர்த்தி சாமுண்டீஸ்வரிக்கு பூஜை செய்தார். இதைத்தொடர்ந்து மைசூரு அரண்மனை, ஆட்சியர் அலுவலகம், தபால் நிலையம் என மாநகரம் முழுவதும் அலங்கார தோரணங்கள், வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. உலக அளவில் புகழ்ப்பெற்ற இவ்விழாவில் கடந்த 10 நாட்களும் கர்நாடகாவின் வரலாறு, பாரம்பரியம், பண்பாடு, இலக்கியம், கலை, கலாச்சாரம் ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரைப்பட விழா, புத்தக விழா, உணவு விழா, மலர் கண்காட்சி ஆகியவையும், மல்யுத்தம், வாள்வீச்சு போன்ற கர்நாடகாவின் வீர விளையாட்டுகளும் நடத்தப்பட்டன. மைசூரு அரண்மனையில் நவராத்திரி விழாவின் போது மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்த உடையார் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் அறையில் பொதுமக்களிடம் குறைகள் கேட்டு தர்பார் நடத்தினார். பின்னர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அரண்மனையை சுற்றி, தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து ஊர்வலமாக சென்றார். இவ்விழாவின் நிறைவு நாளான விஜயதசமி (நேற்று) அன்று முதல்வர் குமாரசாமி கொடிமரத்துக்கு கும்ப லக்னத்தில் பிற்பகல் 2.30 முதல் பிற்பகல் 3.16 மணி வரை சிறப்பு பூஜை செய்து பிரசித்தி பெற்ற யானைகள் (ஜம்பு சவாரி) சவாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் அர்ஜுனா யானை 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியில் அமர்ந்திருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனை சுமக்க, பலராமா, அபிமன்யூ உள்ளிட்ட 12 யானைகள் பின்தொடர்ந்து சென்றன. இதனை குதிரைப்படை, போலீஸ் படை, நடன குழுவினர், கலைக்குழுவினர் ஆகிய 72 குழுவினரும், 45 அலங்கார வாகனங்களும் பின்தொடர்ந்தன. அரண்மனையில் தொடங்கிய இந்த ஊர்வலம் 5கிமீ தொலை வில் உள்ள மண்டபம் அருகே யுள்ள மைதானத்தை அடைந்ததும், தீப்பந்த ஊர்வலத்தை ஆளுநர் வாஜூபாய் வாலா தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான போலீஸார் இருள் சூழ்ந்த பகுதியில் தீப்பந்தங்களைக் கொண்டு பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் செய்தனர். வண்ண மயமான இந்நிகழ்வை கர்நாடகா மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 5 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT