Published : 10 Oct 2018 08:26 AM
Last Updated : 10 Oct 2018 08:26 AM

மலையாள நடிகர் முகேஷ் மீது பெண் இயக்குநர் பாலியல் புகார்

பிரபல மலையாள நடிகர் முகேஷ். இவர் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவாகவும் உள்ளார். இவர் மீது மும்பையைச் சேர்ந்த பெண் இயக்குநர் டெஸ் ஜோசப் பாலியல் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பதிவில் டெஸ் ஜோசப் கூறுகையில், ‘‘19 ஆண்டுகளுக்கு முன் ‘கோடீஸ்வரன்’ (கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் மலையாள வடிவம்) நிகழ்ச்சியை நான் இயக்கினேன். நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் முகேஷ் இருந்தார். அப்போது அவர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இரண்டு முறை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஹோட்டலில் அவர் இருந்த அறைக்கு பக்கத்திலேயே எனக்கு கட்டாயமாக அறை ஒதுக்கப்பட் டது. இதுகுறித்து எனது முதலாளி டிரெக் ஓபிரைனிடம் (இப்போது திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்) தெரிவித்தேன். அவர் உடனடியாக எனக்கு விமான டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்தார். அன்றிரவே திருவனந்தபுரத்தில் இருந்து மும்பை திரும்பினேன். சரியான நேரத்தில் தலையிட்டு உதவிய டிரெக் ஓபிரைனுக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த புகாரை நடிகர் முகேஷ் மறுத்துள்ளார். ‘‘20 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்று எனக்கு நினைவு இல்லை. நீங்கள் (டெஸ் ஜோசப்) என்ன விரும்புகிறீர்களோ அதை எழுதலாம்’’ என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முகேஷ் கூறியுள்ளார். டெஸ் ஜோசப்புக்கு ஆதரவாக நடிகை பாக்கியலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார். ‘‘முகேஷ் இப்போது நடிகர் என்பதற்கும் மேலாக சட்டசபை உறுப்பினர். எனவே, அவர் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x