Published : 24 Aug 2018 07:39 PM
Last Updated : 24 Aug 2018 07:39 PM

கேரள வெள்ளத்தில் நடந்த ருசிகரம்: ‘படகுல ஏறுங்க, இல்லேனா குத்திருவேன்’; கத்தி முனையில் 100 பேரை மீட்ட இளைஞர்கள்

கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி வீட்டில் இருந்து வரமறுத்த 100 பேரை  கத்திமுனையில் மிரட்டி இரு இளைஞர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள்

கத்தி முனையில் கொள்ளையடிப்பது, வழிப்பறி செய்வது போன்ற கிரிமினல் குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம், பார்த்திருப்போம். ஆனால், கத்தி முனையில் மிரட்டி ஒரு உயிரைக் காக்க முடியுமா?!

ஒரு உயிரல்ல, 100 பேரை இதுபோல் கத்திமுனையில் மிரட்டி வெள்ளத்தில் இருந்து இரு இளைஞர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள்.

பத்தினம்திட்டா மாவட்டம் ரன்னி அருகே ஆயத்தலா பகுதியைச் சேர்ந்த பாபு நம்பூதிரி,எம்.கே. கோபகுமாரன் ஆகிய இரு இளைஞர்கள்தான் கத்தி முனையில் பலரையும் மிரட்டி காப்பாற்றியுள்ளனர்.

கேரளாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் பெருமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்தது. 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கின. 350-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், வெள்ளம் வந்தபோதும், மழை தீவிரமாகப் பெய்த போதும் பலரும் தங்களின் சொந்த வீட்டை விட்டு வர மனசில்லை. வெள்ளம் குறைந்துவிடும், தண்ணீர் வடிந்துவிடும் என்று நம்பி, பலரும் வீட்டைவிட்டு வரவில்லை. ஆனால், கடந்த 10 நாட்களில் ஒவ்வொரு நாளும் மழை வலுத்துப் பெய்ததால், வேறுவழியின்றி பலரும் வீட்டைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கினார்கள்.

ஆனால், சொந்தவீட்டை விட்டு வராமல், வீட்டில் அடைந்து கிடப்பவர்களை எவ்வாறு மீட்பது எனத் தெரியவில்லை. படகில் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களிடமும், வீட்டு உரிமையாளர்கள் வர மறுத்து வீட்டிலேயே இருந்துவிட்டனர். இதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டது.

இதை அறிந்த பத்தினம்திட்டா மாவட்டம் ரன்னி அருகே ஆயத்தலா பகுதியைச் சேர்ந்த பாபு நம்பூதிரி,எம்.கே. கோபகுமாரன் ஆகிய இரு இளைஞர்கள் கத்தி முனையில் ஏராளமானோரை மிரட்டி தங்களின் படகில் அழைத்து வந்து மீட்டனர்.

இது குறித்து பாபு நம்பூதிரி கூறியதாவது:

சொந்த வீட்டில் வசித்தவர்கள் பலர், வெள்ளத்தில் வீடு மூழ்கிவிடாது என்ற நம்பிக்கையிலும், வீட்டை விட்டு வர மனசில்லாமலும் இருந்தனர். படகில் வந்து பலரும் மீட்புப்பணியில் ஈடுபட்டபோது, வரமறுத்துவிட்டனர். இந்தச் செய்தியை அறிந்து நானும் எனது நண்பர் கோபகுமாரும் களத்தில் இறங்கினோம்.

எனக்குச் சொந்தமான சிறிய பைபர் படகு இருந்தது. அந்தப் படகில் நானும் எனது நண்பர் கோபகுமார் சில நண்பர்கள் சேர்ந்து வீடுகளில் முடங்கிக்கிடப்பவர்களை மீட்டோம். முதலில் அவர்கள் வரமறுத்தனர். பின்னர் அவர்களைக் கத்தி முனையிலும், ஆயுதங்கள் மூலம் மிரட்டிப் பணியவைத்து, அவர்களைப் படகில் ஏற்றி, காப்பாற்றி நிவாரண முகாம்களுக்குக் கொண்டு வந்தோம்.

எங்களின் இந்த முயற்சியால் 100 பேரைக் காப்பாற்றினோம். பலர் எங்கள் மீது கோபமாக இருந்தார்களேத் தவிர யாருக்கும் நாங்கள் காயத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், இந்த வெள்ளத்தில் எனது உறவினர் ஒருவரைத்தான் காப்பாற்ற முடியவில்லை. அந்த விரக்தியில்தான் என்னால் முடிந்தவரை பலரைக் காப்பாற்ற இந்த ஆப்ரேஷனில் இறங்கினோம். அதுவும் வெற்றிகரமாக முடிந்தது. இவ்வாறு பாபு நம்பூதிரி தெரிவித்தார்.

பாபு நம்பூதிரி திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் பணியாற்றி வருகிறார். இந்த மீட்புப்பணிக்குப்பின், இப்போது பாபு நம்பூதிரியும், கோபகுமாரும், நிவாரண முகாம்களில் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x