Published : 09 Aug 2018 12:58 PM
Last Updated : 09 Aug 2018 12:58 PM
வடமேற்கு டெல்லியில் நாரெல்லா பகுதியில் சென்றுகொண்டிருந்த கொல்கத்தா சதாப்தி எக்ஸ்பிரஸ் மோதி 20 பசுக்கள் கொல்லப்பட்டன. இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
டெல்லியை அடுத்த காலெனுக்கும் நாரெல்லாவுக்கும் இடையில் நேற்று மாலை 5.44 மணியளவில் நியூடெல்லி-கல்கா சதாப்தி எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருந்தது. ரயில் முழுவேகத்தில் வந்துகொண்டிருந்தபோது அச்சமயம் இருப்புப் பாதையை கடந்துசெல்ல முயன்ற 20 பசுக்கள் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தன.
இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், ‘‘இச்சம்பவத்தையடுத்து தற்போது ரயில்வே பாதைகள் சுத்தம் செய்யப்பட்டுவிட்டன. இது மிகவும் கொடூரமானது. தண்டவாளத்தில்கூட சின்னஞ்சிறிய சேதாரம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்த இடத்திற்கு மாலை 7 மணிளவில் மீண்டும் ரயில் புறப்பட்டது.
ரயில் பாதையில் மாட்டு மந்தையைக் கண்டபோது ரயிலின் ஓட்டுநர் எமர்ஜென்ஸி பிரேக்கை பயன்படுத்தியுள்ளார். ஆனால் ரயில் முழுவேகத்தில் சென்றுகொண்டிருந்ததால் மாடுகள் தப்பிக்க நேரமில்லாமல் போய்விட்டது. அதற்குள் ரயில் வேகமாக அவற்றைக் கடந்து சென்றது.
சம்பவ இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் 800 மீட்டர் தூரத்தில் ஒரு லெவல் கிராஸிங் உள்ளது. அந்த வழியாக இந்த கால்நடைகள் சென்றிருந்தால் இந்த துயரத்தைத் தவிர்த்திருக்கலாம்.
அந்த கொடூரமான சம்பவம் மோசமானது என்றாலும்கூட நாங்கள் பெருமையுடன் சொல்லமுடியும், கோர விபத்து நடந்த இடத்தில் எல்லாவற்றையும் யார் சுத்தம் செய்தார்களோ அந்த ரயில்வே ஊழியர்களை வணங்கத்தக்கவர். பயணிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு இதனால் எந்தத் தாமதமும் ஆகவில்லை. அந்தக் காட்சியைக் கடந்து அவர்கள் உரிய இடத்திற்கு பாதுகாப்பாக போய்ச் சேர்ந்துவிட்டனர்’’ என ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT