Published : 16 Aug 2018 08:17 AM
Last Updated : 16 Aug 2018 08:17 AM

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டால் மாநிலத்துடன் டிசம்பரில் தேர்தல் நடத்த தயார்: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டால், டிசம்பர் மாதமே 4 மாநில சட்டப் பேரவைகளுடன் மக்களவைக்கும் தேர்தல் நடத்த தயார் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

மக்களவைக்கும் சட்டப்பேரவை களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வலியுறுத்தி மத்திய சட்ட ஆணையத்துக்கு பாஜக தலைவர் அமித் ஷா கடந்த திங்கட்கிழமை கடிதம் எழுதினார். மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டு மானால் சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தை கூட்டவும் குறைக்கவும் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் இப்போதைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியம் இல்லை என்றும் தலைமை தேர்தல் ஆணையர் பி.ராவத் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

மக்களவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில்தான் தேர் தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், மிசோரம் மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் டிசம்பர் மாதமும் சத்தீஸ்கர், மத்திய பிர தேசம், ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதமும் முடிகிறது. எனவே, இந்த மாநிலங்களுக்கு டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே, 4 மாநிலங்களின் தேர்தலோடு மக்களவைக்கும் முன்னதாகவே தேர்தல் நடத்தப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகின்றன.

இதுபற்றி பிடிஐ செய்தி நிறு வனம் சார்பில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்திடம் கேட் கப்பட்டது. அதற்கு ஓ.பி. ராவத் கூறுகையில், ‘‘மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப் பட்டால் மக்களவைக்கும் 4 மாநிலங்களின் சட்டப்பேரவை களுக்கும் டிசம்பர் மாதமே தேர்தல் நடத்த முடியும். அதற்கு தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. அதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. வாக்குப் பதிவுக்கு தேவையான ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் தயாராகிவிடும். வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப் படுத்தும் 17.5 லட்சம் விவிபாட் இயந்திரங்கள் நவம்பர் மாத இறுதிக்குள் தயாராகிவிடும்’’ என்றார்.

இதற்கிடையே, மக்களவைக் கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பரிந்துரை அளிக்க சட்ட ஆணையத்திடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அரசியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று சட்ட ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x