Published : 21 Aug 2018 01:44 PM
Last Updated : 21 Aug 2018 01:44 PM
தெலங்கானா அரசின் விளம்பரத்துக்காகத் தனது குடும்பப் புகைப்படத்தை அளித்த பெண்ணின் கணவரின் பதிலாக மற்றொருவரின் புகைப்படம் இருந்ததைப் பார்த்து அந்தப் பெண் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்து புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த தெலங்கானா அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பத்மா. இவரின் கணவர் நயகுலா நாகராஜு. இவர்கள் குடும்பத்துடன் ஹைதராபாத்தில் உள்ள மாஸ் ஆடியோ விஷூவல்ஸ் பிரைவேட் லிமிட் என்ற புகைப்படம் எடுக்கும் ஸ்டுடியோவில் கடந்த 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புகைப்படம் எடுத்துள்ளனர்.
இந்தப் புகைப்படம் எடுக்கும் நிறுவனத்திடம் தங்களின் புகைப்படத்தை விளம்பரத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பத்மாவும், அவரின் கணவரும் கையொப்பமிட்டு கடிதம் அளித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 15-ம் தேதி தெலங்கானா அரசின் சார்பில் இரு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதில் விவசாயிகளுக்கான உயிர் காப்பீடு திட்டம், மற்றொன்று இலவச கண் பரிசோதனை திட்டம். இந்தத் திட்டங்களுக்கான விளம்பரத்துக்கான படத்தில் பத்மாவும் அவரின் கணவரின் படத்தையும் விளம்பர நிறுவனம் பயன்படுத்தி இருந்தது.
ஆனால், ஒரு விளம்பரத்தில் பத்மாவின் உண்மையான கணவரின் புகைப்படத்தையும், மற்றொரு விளம்பரத்தில் பத்மாவின் கணவருக்குப் பதிலாக வேறு ஒருவரின் புகைப்படத்தையும் வைத்து விளம்பரத்தைப் பிரசுரித்து விட்டனர். இந்த விளம்பரம் கடந்த 15-ம்தேதி மாநிலம் முழுவதும் வெளியானது.
இந்த விளம்பரத்தைப் பார்த்த பத்மா கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். ஒரு விளம்பரத்தில் தனது உண்மையான கணவரின் புகைப்படத்தையும், மற்றொரு விளம்பரத்தில் தனது கணவருக்குப் பதிலாக வேறு ஒருவரின் தலை மட்டும் மார்பிங் செய்யப்பட்டு இருப்பதைப் பார்த்து வெட்கப்பட்டு வேதனை அடைந்தார்.
இது குறித்து ஹைதராபாத்தில் உள்ள தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பத்மா புகார் செய்தார். இதையடுத்து, இந்த விளம்பரத்தை வெளியிட உரிமம் பெற்றிருந்த விளம்பர நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் மற்றும் மக்கள் தொடர்பு ஆணையர் அரவிந்த் குமார் கூறுகையில், ''இந்த விளம்பரத்தை அச்சிடுவதற்குத் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருந்தோம். இந்தப் புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப் பெண்ணின் புகாரையடுத்து விசாரணை நடந்து வருகிறது'' எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT