Last Updated : 25 Jul, 2018 01:06 PM

 

Published : 25 Jul 2018 01:06 PM
Last Updated : 25 Jul 2018 01:06 PM

“வாங்க கட்டிப்பிடிக்கலாம்” - டெல்லியில் காங்கிரஸ் பிரச்சாரம்

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசி முடித்தபின் பிரதமர் மோடியைக் கட்டித்தழுவினார். இதைத்தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் வாங்கக் கட்டிப்பிடிக்கலாம் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

அன்பையும், நட்பையும், சகோதரத்துவத்தையும் நம்பும் எவரும் விருப்பத்துடன் கட்டிப்பிடிக்கலாம். வெறுப்புணர்வை அன்பால்தான் முறியடிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் விருப்பமுள்ளவர்கள் கட்டிப்பிடிக்கலாம் என்ற பிரச்சாரத்தை தொடங்கினார்கள்.

மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கடந்த 20-ம் தேதி நடந்தபோது, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, ‘‘என்னை நீங்கள் சிறுபிள்ளை என நினைத்தாலும், நான் உங்கள் மீது வெறுப்புணர்வு கொள்ளமாட்டேன்’’ என்று கூறி பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்ற ராகுல்காந்தி அவரைத் கட்டித்தழுவினார். பதிலுக்கு ராகுலை அழைத்துக் கைகுலுக்கி பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

அதன்பின் தனது இருக்கையில் அமர்ந்த ராகுல் காந்தி சக காங்கிரஸ் எம்.பிக்களைப் பார்த்து கண் அடித்தார். இந்தச் சம்பவம் நடந்த மறுநாள் டெல்லி முழுவதும் ராகுல் காந்தி, மோடியைக் கட்டித்தழுவிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில், அன்பால் வெல்வோம், வெறுப்பால் அல்ல என்று எழுதப்பட்ட இருந்தது.

இந்நிலையில்,டெல்லியில் உள்ள கன்னாட்பிளேஸ் பகுதியில், நேற்று காங்கிரஸ் தொண்டர்கள்  கட்டிப்பிடித்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள்.

வெறுப்புணர்ச்சியை ஒழிப்போம், அன்பை விதைப்போம், நாட்டைக் காப்போம் என்ற வாசகம் அடங்கி பதாகைகளை கையில் ஏந்தி 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கட்டிப்பிடித்தல் பிரச்சாரம் செய்தனர்.

மோடியைக் கட்டி அணைத்த ராகுல்காந்தியின் புகைப்படத்தையும் கையில் வைத்திருந்தனர். அன்பின்மீதும், சகோதரத்துவத்தின் மீதும் நம்பிக்கை இருக்கும் அனைவரும் கட்டிப்பிடிக்கலாம் என்று சாலையில் செல்பவர்களை அழைத்து கட்டிப்பிடித்து பிரச்சாரம் செய்தனர்.

இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி அனிருத் சர்மா கூறுகையில், ‘‘வெறுப்பை ஒழித்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியதை நாங்கள் செயல்படுத்துகிறோம். கட்டிப்பிடித்தல் மூலம் அன்பு விதைக்கப்படும். அதேசமயம், நாட்டில் ஒவ்வொரு மதத்தினரும், மற்ற மதத்தினரின் நம்பிக்கைகளை, மதித்து, அன்புடன் பழக வேண்டும் என்பதை தெரிவிக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x