Published : 25 Jul 2018 01:27 PM
Last Updated : 25 Jul 2018 01:27 PM
குஜராத்தில் 2015-ம் ஆண்டு படேல் சமூக இடஒதுக்கீடு போராட்டத்தின்போது பாஜக எம்எல்ஏ அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் போராட்டக்குழு தலைவர் ஹர்திக் படேல் உள்ளிட்ட இருவருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் 2015-ம் ஆண்டு படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடந்தது. ஹர்திக் படேல் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அகமதாபாத் விஸ்நகரில் பாஜக எம்எல்ஏ அலுவலகம் சூறையாடப்பட்டது. வாகனங்கள் எரிக்கப்பட்டன.
ஹர்திக் படேல் உட்பட ‘படிதார் அனாமத் அந்தோலன்’ அமைப்பின் தலைவர்கள் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல், வன்முறை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது, ஹர்திக் படேல் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த வழக்கில் விஸ்நகர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட ஹர்திக் படேல் மற்றும் லால்ஜி படேல் ஆகிய இருவருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
படேல் இடஒதுக்கீடு போராட்டத்தின்போது நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஹர்திக் படேல் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT