Published : 18 Jun 2018 09:12 AM
Last Updated : 18 Jun 2018 09:12 AM

டெல்லி முதல்வர் - துணை நிலை ஆளுநர் மோதல்: பிரதமர் தலையிட 4 முதல்வர்கள் வலியுறுத்தல்

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் - துணை நிலை ஆளுநர் இடையிலான மோதல் விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை மம்தா பானர்ஜி உட்பட 4 மாநிலங்களின் முதல்வர்கள் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.

முதல்வர் கேஜ்ரிவால் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தில் டெல்லி தலைமைச் செயலாளர் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டார். இதைக் கண்டித்து ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், டெல்லியின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணிக்குத் திரும்ப உத்தரவிட வேண்டும் என்றும் துணை நிலை ஆளுநர் அனில் பைஜலை வலியுறுத்தி அவரது அலுவலகத்தில் கேஜ்ரிவால் கடந்த 7 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆகியோர் நேற்று முன்தினம் கேஜ்ரிவாலை சந்திக்க முயன்றனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி உட்பட 4 மாநிலங்களின் முதல்வர்களும் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, முதல்வர் கேஜ்ரிவாலுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையிலான மோதலால் அரசியல் சாசன சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுத்தினர்.

பின்னர், ட்விட்டரில் பதிவிட்ட மம்தா, ‘‘ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடியை சந்தித்தேன். டெல்லி அரசில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உடனடியாக தீர்க்குமாறு பிரதமரை கேட்டுக் கொண்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் மறுப்பு

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் 4-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குப் பதில், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து முதல்வர் கேஜ்ரிவால் கூறும்போது, ‘‘நிதி ஆயோக் கூட்டத்தில் எனக்குப் பதில் பங்கேற்கும்படி ஆளுநருக்கு நான் ஒப்புதல் எதுவும் அளிக்கவில்லை. ஆனால், அந்தக் கூட்டத்தில் எனக்குப் பதில் ஆளுநர் பங்கேற்றுள்ளார். எந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவின்படி அவர் எனக்கு பதில் கூட்டத்தில் பங்கேற்றார்?’’ என்று குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறும்போது, ‘‘டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கூறும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. ஆளுநர் அனில் பைஜால், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை’’ என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். - பிடிஐ/ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x