Published : 04 Jun 2018 06:53 AM
Last Updated : 04 Jun 2018 06:53 AM
மத்திய பிரதேச அரசு வாக்காளர் பட்டியலில் 60 லட்சம் போலி வாக்காளர்களைச் சேர்த்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் நேற்று புகார் செய்தனர்.
காங்கிரஸ் கட்சியினரின் புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் 2 குழுக்களை அமைத்து நேற்று உத்தரவிட்டது. விசாரணை அறிக்கையை வரும் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தலைமையில், கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லியில் உள்ள மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தனர்.
பின்னர் கமல்நாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மத்திய பிரதேசத்தில் சுமார் 60 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது ஒரு குறிப்பிட்ட நபரின் பெயர், முகவரி ஆகியவை பல தொகுதிகளில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம். உடனடியாக போலி வாக்காளர்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம். மேலும் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT