Last Updated : 09 Jun, 2018 04:52 PM

 

Published : 09 Jun 2018 04:52 PM
Last Updated : 09 Jun 2018 04:52 PM

குட்கா வழக்கில் அடையாளம் தெரியாத அதிகாரிகள் மீது வழக்கு: சட்டவிரோத பண பரிமாற்றப் புகாரில் அமலாக்கத்துறை நடவடிக்கை

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கில் சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் அடையாளம் தெரியாத அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசு 2013-ல் தமிழகத்தில் குட்கா பொருட்கள் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதித்தது. இந்த உத்தரவு 2015-ல் அறிவிப்பாணையாக அரசிதழில் வெளியிடப்பட்டது. எனினும், பான், குட்கா தயாரிப்பு, விற்பனை பெரிய அளவில் நடைபெற்றது. டன் கணக்கில் அவை தயாரிக்கப்பட்டு, தமிழகத்துக்கும், அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுவது தொடர்ந்தது.

இதற்கு அனைத்து மட்டத்திலும் லஞ்சம் வழங்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்தன. 2015 ஜூன் மாதம் மாதவரத்தில் ஒரு கிடங்கில் மூட்டை மூட்டையாக மாவா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர், இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.

2016-ல் குட்கா கம்பெனி ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த புகாரின்பேரில் வருமான வரித் துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தினர். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் ரூ.39.10 கோடி கையூட்டு பெற்றதாக அந்த டைரியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

கடந்த 2017-ம் ஆண்டு இந்த விவகாரத்தை தி இந்து வெளிப்படுத்தியது. ஆனால், நீண்டகாலமாக இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட்டனர். ஆனால், சிபிஐ விசாரணையை எதிர்த்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகாதாரத்துறையில் பணியாற்றும் அதிகாரி சிவக்குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

குட்கா ஊழல் வழக்கில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை நடந்த புகார் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் பெயர் குறிப்பிடாமல் அரசு அதிகாரிகள் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குட்கா விவகாரத்தில் பண மோசடி மற்றும் போலியான பெயர்களில் பண பரிவர்த்தனை நடந்தாக புகார் எழுந்துள்ளதால் அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குட்கா ஊழல் வழக்கில் அடையாளம் தெரியாத கலால் வரித்துறை, தமிழக உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரி, அரசு அதிகாரிககள், தனிநபர்கள் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதுபோலவே, தற்போது அமலாக்கத்துறையும் அடையாளம் குறிப்பிடப்படாத அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x