Published : 17 Jun 2018 09:29 AM
Last Updated : 17 Jun 2018 09:29 AM

திருமலையில் மீண்டும் ஆயிரங்கால் மண்டபம்: நடிகை ரோஜா வலியுறுத்தல்

திருமலையில் இடிக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தை மீண்டும் கட்டவேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்காலிடம் எம்எல்ஏ ரோஜா நேற்று மனு அளித்தார்.

திருமலையில் கோயிலுக்கு முன்பிருந்த பழங்கால ஆயிரங்கால் மண்டபம், கோயில் விரிவாக்கப்பணி காரணமாக இடிக்கப்பட்டது. இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதே இடத்தில் ஆயிரங்கால் மண்டபம் கட்ட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா, நேற்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்காலை சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் அவர் கூறும்போது, ‘‘ஏழுமலையான் கோயிலுக்கு முன்பிருந்த பழங்கால ஆயிரங்கால் மண்டபத்தை கட்ட வலியுறுத்தி மனு அளித்தேன். ஆந்திர மாநிலத்தில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பலர் அபரிகரித்துள்ளனர். இந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுப்பது அவசியம். கடப்பா இரும்பு தொழிற்சாலைக்காக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. அறிவித்திருப்பது சிரிப்பை வரவழைக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக பாஜகவுடன் இணைந்து செயல்பட்ட தெலுங்கு தேசம் கட்சி, தற்போது நாடகமாடினால் அதை மக்கள் நம்ப மாட்டார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x