Published : 13 Jun 2018 08:36 AM
Last Updated : 13 Jun 2018 08:36 AM

ஆர்எஸ்எஸ் தொண்டர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுலுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு

ஆர்எஸ்எஸ் தொண்டர் தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, மகாராஷ்டிர நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம், பிவாண்டி நகரில் கடந்த 2014-ம் ஆண்டு, மார்ச் 6-ம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பேசினார். அப்போது மகாத்மா காந்தி கொலையின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்ளது என அவர் பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ராஜேஷ் குந்தே என்ற ஆர்எஸ்எஸ் தொண்டர் ராகுலுக்கு எதிராக பிவாண்டி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நேற்று ஆஜராகுமாறு ராகுலுக்கு கடந்த மே 2-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று ராகுல் நேற்று காலை 11.05 மணிக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிவாண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிவில் நீதிபதி ஏ.ஐ.ஷேக் முன்னிலையில் ஆஜரானார்.

ராகுல் மீதான குற்றச்சாட்டு மற்றும் புகார்தாரரின் அறிக்கையை நீதிபதி வாசித்தார். பிறகு இந்தக் குற்றச்சாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என ராகுல் காந்தியிடம் நீதிபதி கேட்டார். அப்போது ராகுல், “நான் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை” என்றார்.

எனினும், ராகுல் காந்திக்கு எதிராக இந்திய தண்டனை சட்டத்தின் 499 (அவதூறு), 500 (அவதூறுக்கான தண்டனை) ஆகிய பிரிவுகளின் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தை விட்டு 12.15 மணிக்கு ராகுல் காந்தி வெளியேறினார். அடுத்த விசாரணையில் ராகுல் ஆஜராகத் தேவையில்லை என அவரது வழக்கறிஞர்கள் கூறினர்.

வழக்கு தொடுத்த ராஜேஷ் குந்தே கூறும்போது, “நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராகுல் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அப்போது, “ஒட்டுமொத்தமாக ஒரு அமைப்பின் மீது குற்றம் சாட்டுவது தவறு. வருத்தம் தெரிவிக்காவிடில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என நீதிமன்றம் கூறியது. இதை ஏற்காத ராகுல் விசாரணையை எதிர்கொள்வதாக கூறினார்.

பிவாண்டி நீதிமன்றத்துக்கு வெளியே ராகுல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு எதிராகவே நாங்கள் போரிட்டு வருகிறோம். இந்த அரசு பணக்காரர்களுக்கான அரசு. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகளின் பாதுகாப்பு குறித்து பிரதமர் பேச மறுக்கிறார். என் மீது பாஜகவினர் எத்தனை வழக்கு போட்டாலும் அதை எதிர்கொள்வேன்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x