Last Updated : 17 Jun, 2018 04:56 PM

 

Published : 17 Jun 2018 04:56 PM
Last Updated : 17 Jun 2018 04:56 PM

‘அரவிந்த் கேஜ்ரிவால் நக்சலைட், மோசடிக்காரர்’ - சுப்பிரமணியன் சுவாமி பாய்ச்சல்

டெல்லி முதல்வர் ஒரு நக்சலைட், மோசடிக்காரர்(420), 4 மாநில முதல்வர்கள் சென்று சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாகச் சாடியுள்ளார்.

டெல்லியின் தலைமை செயலாளர் அன்ஷு பிரசாத் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அமைச்சரவைக் கூட்டத்திலும் எந்த ஐஏஎஸ் அதிகாரிகளும் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்குச் சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் துணைநிலை ஆளுநர் பைஜாலை முதல்வர் கேஜ்ரிவால் கேட்டுக்கொண்டார். ஆனால், அவரைச் சந்திக்க பைஜால் மறுத்துவிட்டார்.

இதையடுத்து, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிஸ்சோடியா உள்ளிட்ட அமைச்சர்கள் ஆளுநர் அலுவலகத்திலேயே அமர்ந்து கடந்த 7 நாட்களாகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி ஆகியோர் முதல்வர் கேஜ்ரிவாலைச் சந்திக்க முயன்றனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:

தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் ஒரு ஒழுங்குமுறை இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கென விதிமுறைகளும் உள்ளன. ஒரு மாநிலத்தில் முதல்வராக பதவிப்பிரமானம் எடுத்த அரவிந்த் கேஜ்ரிவால் செய்யும் செயல்கள் அனைத்தும் மோசமாகவும், வெட்கக்கேடாகவும் இருக்கிறது. இவரை ஏன் 4 மாநில முதல்வர்களும் சந்திக்க வர வேண்டும். கேஜ்ரிவாலுக்கு 4 மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவிக்கக் கூடாது.

ஊழலுக்கு எதிரான அமைப்பைத் தொடங்கி, அண்ணா ஹசாரேவின் இயக்கத்தில் இணைந்து, பின்னர் அவரையே துரத்திவிட்டார் கேஜ்ரிவால். அரவிந்த் கேஜ்ரிவால் பிறவியிலேயே ஒரு நக்சலைட். இவருக்கு 4 முதல்வர்களும் ஏன் ஆதரவு தெரிவிக்கிறார்கள். கூட்டாட்சி அமைப்பின் அர்த்தம் இந்த 4 முதல்வர்களுக்கும் தெரியுமா. அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு படிக்காதவர், அவருக்கு ஒன்றும் தெரியாது.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x