Published : 15 Jun 2018 02:37 PM
Last Updated : 15 Jun 2018 02:37 PM

சாதிக் கொடுமை: கிணற்றில் குளித்ததற்காக நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சிறுவர்கள்

மகாராஷ்டிராவில் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் கிணற்றில் குளித்ததற்காக தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இரண்டு சிறுவர்களை நிர்வாணமான நிலையில் அடித்து துன்புறுத்தும் அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் ஜல்கான் மாவட்டத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் தரப்பில்,  ”இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. சச்சின் சந்தனேவும், அவருடைய உறவினரான ராகுலும்,  ஈஷ்வர் பல்வாண்ட் ஜோஷு என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் குளித்துள்ளனர். இதனால் கிணறு அசுத்தமாகிவிட்டதாக ஈஷ்வர் கருதியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்தச் சிறுவர்களின் ஆடைகளைக் கலைந்து நிர்வாணமாக்கி அவர்களை அடித்திருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்கலில் தற்போது பரவியதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குஜராத் எம்எல்ஏ  ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் தனது ட்விட்டர் பக்கங்களில் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்கு மகாராஷ்டிரா அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம்  தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் ஒருவர் கூறும்போது, ”சச்சினின் அம்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் நாங்கள் ஜோஷி மற்றும் பர்லாட் லோகரைக் கைது செய்துள்ளோம்” என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x