Published : 12 Jun 2018 08:12 AM
Last Updated : 12 Jun 2018 08:12 AM
கார்கில் போரில் இறந்த ராணுவ வீரரின் மகன், தனது தந்தை பணியாற்றிய அதே படைப்பிரிவில் பணியில் சேர்ந்துள்ளார். 19 ஆண்டுக்கு பின் தனது சபதம் நிறைவேறியதாக அவர் கூறியுள்ளார்.
எல்லையில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே கார்கில் போர் நடந்தபோது 1999-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி, ராணுவத்தின் ராஜபுதன ரைபிள்ஸ் 2-வது பட்டாலியன் படைப்பிரிவில் பணியாற்றிய உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வீரர் பச்சன் சிங் வீரமரணம் அடைந்தார். அவர் இறந்தபோது அவரது மகன் ஹிதேஷ் குமாருக்கு 6 வயது. தனது தந்தை வீர மரணம் அடைந்தார் என்ற செய்தியை கேட்டவுடன் இளம் வயதில் ஹிதேஷ் குமாருக்கு தானும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. ராணுவத்தில் சேருவேன் என்று சபதம் எடுத்துக் கொண்டார்.
அதற்கேற்ப ஹிதேஷ் குமார் படிப்பை முடித்து ராணுவத்தில் சேர விண்ணப்பித்து தேர்வானார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு பெற்று ராணுவத்தில் சேர்ந்துள்ளார். அதிலும் தனது தந்தை பச்சன் சிங் பணியாற்றிய ராஜபுதன ரைபிள்ஸ் படைப்பிரியிவிலேயே லெப்டினன்ட் ஆக சேர்ந்துள்ளார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘தந்தை இறந்ததும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 19 ஆண்டுகளுக்கு பின் எனது சபதம் நிறைவேறியுள்ளது. பெருமையாகவும் நேர்மையாகவும் தாய்நாட்டுக்கு பணியாற்ற விரும்புகிறேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT