Published : 05 Jun 2018 08:52 AM
Last Updated : 05 Jun 2018 08:52 AM

திருட்டு வழக்கில் பாட்டி, மகள், பேத்தி கைது: ரூ. 6.42 லட்சம் நகைகளை பறிமுதல் செய்த திருப்பதி போலீஸார்

திருடுவதையே தொழிலாக கொண்டு செயல்பட்ட பாட்டி, மகள், பேத்தி ஆகிய 3 பேரை நேற்று திருப்பதி போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 6 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள 214 கிராம் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து திருப்பதி குற்றப்பிரிவு டிஎஸ்பி ரவிசங்கர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஹைதராபாத் அம்பர்பேட்டா பகுதியை சேர்ந்தவர் துளசி என்கிற நிர்மலா என்கிற சையத் ரஷீத் பேகம் (58). கணவரை விட்டு பிரிந்த இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உல்லாச வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு திருட்டு தொழில் செய்ய முடிவு செய்தார். இதற்காக தனது மகள் லட்சுமி என்கிற மீருண்நிஷா (35) மற்றும் பேத்தி சோனி என்கிற ரிஜ்வானா (19) ஆகியோரையும் கூட்டு சேர்த்து கொண்டு திருட்டில் ஈடுபட்டார்.

மேலும் இவர்களுக்கு கீழ் 20-க்கும் மேற்பட்ட பெண்களும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், ஹைதராபாத்தில் மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தனியாக உள்ள பெண்களை குறி வைத்து நகைகளை திருடி உள்ளனர். திருட்டு குற்றத்துக்காக இவர்கள் பலமுறை ஹைதராபாத் செஞ்சல் கூடா சிறையில் தண்டனை அனுபவித்துள்ளனர். மேலும், ஹைதராபாத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருடிய நகைகளை விற்று, இவர்கள் ஹைதராபாத்தில் அதிக வாடகையில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து, உல்லாசமான வாழ்க்கையை அனுபவித்து வந்தது தெரிந்தது.

இதனிடையே கடந்த 2 ஆண்டுகளாக திருப்பதியிலும் இவர்கள் பக்தர்கள், பொதுமக்களை குறி வைத்து திருடி வந்தனர். புகார்களின் அடிப்படையில் திருப்பதி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாட்டி, பேத்தி, மகளை தேடி வந்தனர். திருடிய நகைகளை விற்க 3 பேரும் மீண்டும் நேற்று திருப்பதி வந்தபோது, போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 6.42 லட்சம் மதிப்புள்ள 214 எடை கொண்ட தங்க நகைகளை போலீஸார் மீட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x