Published : 13 Jun 2018 07:50 AM
Last Updated : 13 Jun 2018 07:50 AM
மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஸ்ரீராம சேனா அமைப்பை சேர்ந்த பரசுராம் வாக்மோர் என்ற இளைஞரை சிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர். இதற்கு இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், இந்துத்துவ அரசியல் எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் (55) கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில் இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுப்படை (சிஐடி) அமைக்கப்பட்டது.
இவ்வழக்கில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த நவீன் குமாரரை சிஐடி போலீஸார் கைது செய்தனர். விசாரணையின் போது நவீன் குமார் பல்வேறு தகவல்களை அளித்துள்ளார்.
அதன்பேரில் சிஐடி போலீஸார் கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தகியை சேர்ந்த பரசுராம் வாக்மோர் (26) என்பவரை நேற்று கைது செய்தனர். அங்கு செல்போன் கடை வைத்திருக்கும் இவர், ஸ்ரீராம சேனா அமைப்பின் நிர்வாகியாக உள்ளார். பரசுராம் வாக்மோரை கைது செய்த போலீஸார், நேற்று பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது போலீஸாரின் வேண்டுகோளுக்கிணங்க, பரசுராம் வாக்மோரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனிடையே சிஐடி போலீஸார் பரசுராமுக்கு நெருக்கமான இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்த சுனில் அகசாரா (28), மனோகர் எட்வே (30), சுஜித் குமார் (37), அமோக் காலே (40), அமித் தெக்வேகர் (27) ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்துத்துவா அமைப்பினர் கைது செய்யப்பட்டதற்கு ஸ்ரீராம சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT