Published : 09 Jun 2018 08:13 AM
Last Updated : 09 Jun 2018 08:13 AM

ஏழுமலையான் கோயிலில் முறைகேடா?- திருப்பதியில் இன்று பீடாதிபதிகள் ஆலோசனை

திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த 24 ஆண்டுகளாக பிரதான அர்ச்சகராக பணியாற்றி வந்த ரமண தீட்சிதர் தேவஸ்தானத்தின் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவரை பணியில் இருந்து தேவஸ்தானம் நீக்கியது.

அதன்பின் ரமண தீட்சிதர் மேலும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். இதில், குறிப்பாக, மைசூர் மகாராஜா கடந்த 1944-ம் ஆண்டு ஏழுமலையானுக்கு வழங்கிய பிளாட்டினம் ஹாரத்தில் இருந்த விலை மதிக்க முடியாத வைரக்கல் ஒன்று காணாமல் போனதாகவும், இதேபோன்று, பல நகைகள் காணாமல் போய் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாஜக தலைவர் அமித் ஷா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை சந்தித்தும் ரமண தீட்சிதர் புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று திருமலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘எதுவாக இருப்பினும், ரமண தீட்சிதர் தேவஸ்தான அதிகாரிகளிடம் கூறி இருக்க வேண்டும். செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுப்பது, அமித் ஷா, ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரிடம் முறையிடுவது தவறு’’ எனக் கூறினார்.

இந்நிலையில், நேற்று திருமலையில் ஏழுமலையானை ஸ்ரீபீடம் பரிபூர்ணாநந்தா சுவாமிகள் தரிசித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ரமண தீட்சிதர் கூறிய ஆட்சேபணைகளை தேவஸ்தானம் மற்றும் அதிகாரிகள் மறுத்துள்ளனர். எனினும் இந்த விவகாரங்களில் உண்மை என்ன என்பது குறித்து சனிக்கிழமை நடைபெற உள்ள பீடாதிபதிகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு, இதன் தீர்மானங்களை முதல்வர் சந்திரபாபுவிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x