Last Updated : 22 Aug, 2014 10:02 AM

 

Published : 22 Aug 2014 10:02 AM
Last Updated : 22 Aug 2014 10:02 AM

கர்நாடக முன்னாள் போலீஸ் அதிகாரி சங்கர் பிதரி பா.ஜ.க.வில் இணைந்தார்: 4-வது முறையாக கட்சி மாறினார்

கர்நாடக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யும், சந்தன மரக் கடத்தல் வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்ட காவல் படையின் தலைவருமான‌ சங்கர் பிதரி, பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கர்நாடக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யாகவும், பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனராக‌வும், வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட படையின் தலைவராகவும் செயல்பட்டத‌ன் மூலம் சங்கர் பிதரி அந்த மாநிலம் முழுவதும் பரவலாக அறியப்பட்டார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் காங்கிரஸில் இருந்து விலகினார்.

அதன் பிறகு முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து, கர்நாடக மாநில தலைவராக பதவி வகித்தார். மாநில‌ நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்தும் விலகினார்.

அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக‌ பா.ஜ.க. தலைவர்களிடம், அக்கட்சியில் இணைய விரும்புவதாகவும், மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதை பாஜக தலைவர்கள் ஏற்கவில்லை. இதனால், 'ஜனசக்தி' என்ற தனிக் கட்சி தொடங்கி மக்களவைத் தேர்தலில் பாகல்கோட்டை தொகுதியில் போட்டியிட்டார். இதில் மிகக் குறைந்த வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார்.

இந்நிலையில் சங்கர் பிதரி புதன்கிழமை மாலை பெங்களூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கர்நாடக‌ மாநில தலைவர் பிரஹ‌லாத் ஜோஷி, முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் தலைமையில் அக்கட்சியில் இணைந்தார்.

பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் பிதரிக்கு பூங்கொத்து வழங்கும் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். உடன் மாநில பா.ஜ.க. தலைவர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x