Published : 07 May 2018 08:53 AM
Last Updated : 07 May 2018 08:53 AM

3 ஜவான்களை சுட்டுக் கொன்று பிஎஸ்எப் வீரர் தற்கொலை

3 ஜவான்களை சுட்டுக் கொன்று விட்டு எல்லைப் பாதுகாப்புப் படை(பிஎஸ்எப்) வீரர் தற்கொலை செய்துகொண்டார்.

திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டம் மாகுருலி சோதனைச் சாவடியில் பணிபுரிபவர் பிஎஸ்எப் வீரர் சிஷு பால். இவர் நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் தனது துப்பாக்கியை இரானி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வந்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலர் பிஜோய் குமார் பணியிலி ருந்தார்.

துப்பாக்கியை ஒப்படைக்க வந்த சிஷு பால், திடீரென பிஜோய் குமாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் பிஜோய் குமார் அதே இடத்திலேயே இறந்தார். இதைத் தொடர்ந்து அருகிலிருந்த கான்ஸ்டபிள்கள் ரிங்கு குமார், ராகேஷ் குமார் ஜாதவ் ஆகியோரையும் சுட்டார்.

இதில் இருவரும் காயமடைந்தனர். பின்னர் சிஷு பால் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர் என்று போலீஸ் எஸ்.பி. ஹர்குமார் தேவ்வர்மா தெரிவித்தார்.

சிஷுபால், 3 ஜவான்களை சுட்டுக் கொன்றதற்கான காரணம் தெரியவில்லை. துப்பாக்கியை ஒப்படைக்கும்போது அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்ததா என்பது தெரியவில்லை. அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று ஹர்குமார் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: 4 பேரின் சடலங்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை முடிந்ததும், அவர்களின் உடல்கள் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x