Last Updated : 13 May, 2018 12:36 PM

 

Published : 13 May 2018 12:36 PM
Last Updated : 13 May 2018 12:36 PM

மகிழ்ச்சி… இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை 4 நாட்கள் முன்பே தொடங்கும்: ஸ்கைமெட் அறிவிப்பு

தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக 4 நாட்களுக்கு முன்பே கேரளாவில் தொடங்கும் என்று ஸ்கைமெட் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை என்பது கேரளா, கர்நாடகம், மஹாராஷ்டிரா, ஒடிசா தமிழகம் ஆகிய பகுதிகளில் ஜூன் 1-ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மழை பெய்யும் காலமாகும்.

வழக்கமாகத் தென் மேற்கு பருவமழை என்பது ஜூன் முதல் தேதி அல்லது அடுத்த சில நாட்களில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே மே 28-ம் தேதியே பருவமழை தொடங்குவது மகிழ்ச்சியான செய்தியாகும்.

தனியார் வானிலை மையமான ஸ்கைமெட்டின் துணைத் தலைவர் மகேஷ் பலாவத் கூறுகையில், அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வரும் 20-ம் தேதி பருவமழை தொடங்கிவிடும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு இருந்தால், இலங்கையிலும் 4 நாட்கள் முன்கூட்டியே பருவமழை தொடங்கும். கிழக்கு மத்திய வஙகக் கடலிலும் பருவமழை முன்கூட்டியே 24-ம் தேதியே தொடங்கும்.

பருவமழை அந்தமானில் முன்கூட்டியே தொடங்குவதன் காரணமாக கேரளாவில் பருவமழை 4 நாட்கள் முன்பாகவே அதாவது மே 28-ம்தேதியே தொடங்கிடும் என எதிர்பார்க்கிறோம். வழக்கமாக ஜுன் 1-ம்தேதி பருவமழை தொடங்குவதற்கு பதிலாக இந்த ஆண்டு 4 நாட்கள் முன்னதாக தொடங்கும்.

மழையைப் பொறுத்தவரை இந்த ஆண்டு இயல்பான மழைக்கு குறைய வாய்ப்பில்லை. அதே சமயம் இயல்புக்கும் அதிகமாகவும் பெய்ய வாய்ப்பு உண்டு எனத் தெரிவித்தார்.

கடந்த 47 ஆண்டுகளாக... ஒரு பார்வை

கடந்த 47 ஆண்டுகளில் பருவமழை தொடங்குவதில் தேதிகளில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பருவமழை தொடங்குவது ஒரு சிலநாட்கள் தாதமாதவும்,முன்கூட்டியும் தொடங்கி இருக்கிறது. ஆனால், சரியாக ஜுன் 1-ம்தேதி தொடங்கியது 3 முறை மட்டுமே.

அதாவது 1971-ம் ஆண்டில் இருந்து 3 முறை மட்டுமே பருவமழை சரியாக ஜூன் 1-ம் தேதி தொடங்கி இருக்கிறது. அதாவது, 1980, 2000, மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே தென்மேற்கு பருவமழை சரியாகத் தொடங்கியது.

கடந்த 2004-ம் ஆண்டு, மே 18-ம் தேதியே தென் மேற்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. மிகவும் தாமதமாக கடந்த 1972-ம் ஆண்டு ஜூன் 18-ம்தேதி பருவமழை தொடங்கியது.

கடந்த 47 ஆண்டுகள் தவிர்த்து, 20 ஆண்டுகளில் ஜூன் 1-ம்தேதி பருவமழை சரியான நேரத்தில் தொடங்கி இருக்கிறது. 10 ஆண்டுகளில் பருவமழை முன்கூட்டியே அதாவது மே 26-ம் தேதியைத் தொடங்கி இருக்கிறது.

அதேசமயம் ஜூன் 1-ம்தேதிக்கு பின், பருவமழை தாமதமாக 27 முறை தொடங்கி இருக்கிறது. 9 முறை, ஜூன் 5-ம்தேதி தொடங்கி இருக்கிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த 2004-ம் ஆண்டு தென் மேற்கு பருவமழை மே 18-ம் தேதி முன்கூட்டியே தொடங்கியபோது, மழை என்பது இயல்புக்கும் குறைவாக 86 சதவீதமே பெய்து, வறட்சி நிலவியது.

ஆனால், கடந்த 1983-ம் ஆண்டு மிகவும் தாமதமாக ஜூன் 13-ம் தேதி பருவமழை தொடங்கிய போது, இயல்புக்கும் அதிகமான மழை பெய்து 113 சதவீதம் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x