Published : 24 May 2018 08:44 AM
Last Updated : 24 May 2018 08:44 AM

படகில் உலகை சுற்றிவந்த கடற்படை வீராங்கனைகள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

படகில் உலகை வெற்றிகரமாக சுற்றிவந்த இந்திய கடற்படையின் முதல் அனைத்து மகளிர் குழுவினர், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தனர்.

இந்திய கடற்படையில் லெப்டினன்ட் கமாண்டர்களாக பணியாற்றும் வர்த்திகா ஜோஷி, பிரதிபா ஜாம்வால், பி.ஸ்வாதி, எஸ்.விஜயாதேவி, பி.ஐஸ்வர்யா, பாயல் குப்தா என்ற 6 வீராங்கனைகள் ‘நேவிகா சாகர் பரிக்ரமா’ என்ற பெயரில் படகில் உலகை சுற்றி வரும் சாகசப் பயணம் மேற்கொண்டனர். இந்திய கடற்படையில் முற்றிலும் பெண்களை மட்டுமே கொண்ட குழு, இந்த சாகசப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ்வி தாரிணி என்ற படகில் இந்தக் குழுவினர் புறப்பட்டனர். சுமார் எட்டரை மாதங்களில் (254 நாட்கள்) இவர்கள் தங்கள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

கடந்த திங்கள்கிழமை கோவா வந்து சேர்ந்த இவர்களை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்றார்.

இந்நிலையில் இக்குழுவினர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தனர். அப்போது, பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு அவர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். வீராங்கனைகள் தங்கள் பயணத்திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் அனுபவங்களைப் பிரதமருடன் பகிர்ந்துகொண்டனர். பயணத்தின்போது ஏற்பட்ட சிறந்த அனுபவங்களை நூலாக எழுதும்படி கூறி அவர்களுக்கு பிரதமர் உற்சாகமூட்டினார். இந்த சந்திப்பின்போது கடற்படை தளபதி சுனில் லன்பா உடனிருந்தார்.

சாகசப் பயணத்துக்கு லெப்டினன்ட் கமாண்டர் வர்த்திகா ஜோஷி தலைமை வகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x