Published : 06 May 2018 02:02 PM
Last Updated : 06 May 2018 02:02 PM

திருப்பதி கோயிலை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம்?- தொல்லியல் துறை கடிதத்தால் சர்ச்சை

திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு, மத்திய தொல்லியல் துறை அனுப்பியுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோயில் நிர்வாகத்தை மத்திய அரசு கைபற்ற முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பியில் உள்ள ஏழுமலையான் கோயில் நாட்டிலேயே அதிக சொத்து கொண்டதாகவும், வருவாய் அதிகம் உள்ள கோயிலாவும் விளங்கி வருகிறது. இந்த கோயிலின் நிர்வாகம் ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வாயிலாக நடந்து வருகிறது.

திருமலையில் உள்ள பழங்கால கட்டடங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், கட்டடங்களை தேவஸ்தான அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடைத்து, மாற்றங்கள் செய்வதாக புகார் வந்தது.

மேலும், பக்தர்கள் வழங்கும் விலை மதிப்புமிக்க காணிக்கைகள் உரிய பாதுகாப்புடன் வைக்கப்படவில்லை, பழங்காலத்தில் மன்னர்கள், பேரரசர்கள் வழங்கிய ஆபரணங்கள் கூட பாதுகாப்பாக இல்லை என்று பல தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறி போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், திருமுலை திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான செயல் அலுவலருக்கு, மத்திய தொல்லியியல் துறையில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், திருப்பதி கோயிலின் தொன்மையான வரலாற்று சிறப்பு மிக்க, கட்டடங்களை தேவஸ்தான அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடைத்து, மாற்றங்கள் செய்வது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.

திருப்பதி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள கட்டடங்களின் விவரங்களை வழங்கும்படி, தொல்லியியல் துறை அதிகாரிகள் கோரியுள்ளனர். மேலும் அந்த கோயிலில் நடந்துள்ள கட்டுமானப் பணிகள் குறித்த விவரங்களையும் அளிக்குமாறு கோரியுள்ளது. இதையடுத்து, திருப்பதி கோயிலை பாரம்பரிய சின்னமாக அறிவித்து மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, ஆந்திர மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆந்திர அரசின் உள்விவகாரங்களில் தலையிடுவதுடன், மாநில சுயாட்சியை மீறி மத்திய அரசு செயல்படுவதாக தெலுங்குதேச தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு குழிதோன்றி புதைப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால், ஆந்திர மாநில பாஜக எம்.பி. நரசிம்ம ராவ் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ‘‘திருப்பதி கோயிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தொன்மையான கட்டடங்கள் நிறைந்த கோயில் என்பதால் அங்குள்ள கட்டட விவரங்களை மட்டுமே தொல்லியல் துறை கேட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

இதனிடையே திருப்பதி கோயிலை கையகப்படுத்தப்போவதாக வெளியான தகவலை மத்திய தொல்லியல் துறையும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் தொன்மையான திருப்பதி கோயிலை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான விவரங்களை கோரி அனுப்பி இருந்த கடிதத்தையும் மத்திய தொல்லியல் துறை திரும்பப் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x