Published : 24 May 2018 08:49 AM
Last Updated : 24 May 2018 08:49 AM

எல்லையில் பாக். தாக்குதல்; அப்பாவி மக்கள் 5 பேர் பலி: 76 ஆயிரம் கிராம மக்கள் வெளியேறினர்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். எல்லைப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியதால் ஆர்னியா நகரம் மற்றும் சுமார் 100 கிராமங்கள் வெறிச்சோடின.

ஜம்மு காஷ்மீரில் ஜம்மு, கதுவா, சம்பா ஆகிய மாவட்டங்களில் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் நேற்று 9-வது நாளாக தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் பீரங்கி குண்டுகளை வீசியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் சம்பா மாவட்டத்தில் இருவர், கதுவா மாவட்டம் ஹிரா நகர் பகுதியில் ஒருவர், ஜம்மு மாவட்டம் ஆர்.எஸ்.புரா பகுதி யில் இருவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆர்னியா நகரம் மற்றும் சுமார் 100 கிராமங்கள் வெறிச்சோடிக் காணப்படுகிறன. சர்வதேச எல்லையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஆர்னியா வில் 18,500 பேர் வசிக்கின்றனர். இங்கு பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இங்கு கால் நடைகளைப் பராமரிக்கவும் வீட்டில் திருட்டுப் போவதை தடுக்கவும் ஒவ்வொரு பகுதியிலும் சிலர் மட்டுமே தங்கியுள்ளர். இவர்களுடன் பாதுகாப்புக்காக போலீஸார் உள்ளனர்.

இதுபோல் ஜம்மு காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். வெளியேறிய அனைவரும் உறவினர் வீடுகள் அல்லது அரசு முகாம்களில் தங்கியுள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x