Published : 07 May 2018 08:56 AM
Last Updated : 07 May 2018 08:56 AM

தர்காக்கள், மசூதிகளுக்குள் மட்டுமே முஸ்லிம்கள் தொழுகை நடத்த வேண்டும்: ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கருத்து

மசூதிகளுக்குள் மட்டுமே தொழுகைகள் நடத்தப்படவேண்டும் என்று ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தற்போது திறந்தவெளி, மைதானங்கள், சாலையோரங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவது அதிகமாகிவிட்டது. திறந்தவெளி பகுதிகளில் தொழுகைகள் நடத்தப்படுவதால் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. எனவே, மசூதிகளிலும் தர்காக்களிலும் மட்டுமே தொழுகை நடத்தப்பட வேண்டும் என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை குருகிராம் பகுதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்களுக்கு ஹிந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சிலர் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொழுகை சமயத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று அந்த அமைப்பினர் கோஷமிட்டுள்ளனர். மேலும் வங்கதேசத்துக்கு திரும்பிச் செல்லுங்கள் என்றும் அவர்கள் கோஷத்தை எழுப்பியுள்ளனர். இதையடுத்து போலீஸார் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர். இப்கோ சவுக், உத்யோக் விகார், லீஷர் வேலி பூங்கா, மால் மைல் பகுதிகளில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

இதைப் போலவே வாஜிரா கிராமத்தில் மைதானத்தில் தொழுகை நடத்தியவர்களுக்கும் ஹிந்துத்துவா அமைப்பினர் தொந்தரவு தந்ததாகத் தெரிகிறது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்தே ஹரியாணா முதல்வர் கட்டார் இவ்வாறு பேசியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வழக்குளை வாபஸ் பெறுமாறு சன்யுக்த் ஹிந்து சங்கர்ஷ் சமிதி அமைப்பினர் போராட்டம் நடத்தி யுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x