Published : 21 May 2018 08:37 AM
Last Updated : 21 May 2018 08:37 AM
மாதிரி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அரசுகள் செயல்படுவதை நிறுத்தாது என்று சட்ட ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற சட்டத்துறை ஆணைய அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது ஒரே நேரத்தில் மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பான விவாதம் எழுந்தது.
அப்போது மாதிரி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வரும்போது அரசு செயல்படுவது நின்றுவிடுகிறது என்று சட்ட ஆணைய அதிகாரிகள், தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினர். அப்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதற்கு பதில் அளித்துள்ளனர்.
மாதிரி தேர்தல் நடத்தை நெறிமுறைகளால் அரசுகள் செயல்படுவது நிறுத்தப்படாது என்றும், அரசின் புதிய திட்டங்கள், அறிவிப்புகளை மட்டுமே கட்டுப்படுத்தும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அப்போது விளக்கமளித்துள்ளனர்.
புதிய திட்டங்களை அறிவித்து அதன்மூலம் ஆளும் அரசுகள் வாக்காளர்களைக் கவர்வதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தேர்தல் நேரத்தின்போது திட்டங்களுக்கு அனுமதி தேவை என்று தேர்தல் ஆணையத்தை அரசுகள் அணுகும்போது தேவைக்கேற்ப திட்டங்களுக்கு அனுமதி தருவது தொடர்பாக ஆணையம் முடிவெடுக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அனைத்து அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி அவர்களிடம் ஒருமித்த கருத்துகளைப் பெற்று இந்த மாதிரி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT