Published : 14 May 2018 07:55 AM
Last Updated : 14 May 2018 07:55 AM
குஜராத் சபர்மதி சிறையில் பெண் கைதிகளுக்கு, சானட்டரி நேப்கின் தயாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் மகாத்மா காந்தி நிறுவிய ‘நவஜீவன் அறக்கட்டளை’ செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், அகமதாபாத்தைச் சேர்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனம் ‘கர்மா பவுண்டேஷன்’ மற்றும் குஜராத் சபர்மதி சிறை அதிகாரிகளிடம் பேசி, சபர்மதி சிறையில் பெண் கைதிகள் சானட்டரி நேப்கின் தயாரிக்கும் கருவியை நிறுவ ஏற்பாடு செய்தது.
அதன்படி சபர்மதி சிறையில் நேப்கின் தயாரிக்கும் கருவிகள் கடந்த 11-ம் தேதி பொருத்தப்பட்டன. அதன்மூலம், பெண் கைதிகள் நேப்கின் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கர்மா பவுண்டேஷன் நிர்வாகி பிரியன்ஷி படேல் கூறியதாவது:
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சபர்மதி சிறைக்கு சென்றேன். அங்கு பெண் கைதிகள் எந்த வேலையும் செய்யாமல் பொழுதை கழிப்பதைப் பார்த்தேன். அப்போதுதான் சிறையில் நேப்கின் தயாரிப்பது குறித்து நவஜீவன் அறக்கட்டளை நிர்வாகிகள் யோசனை தெரிவித்தனர்.
இந்த முயற்சி பெண் கைதிகளுக்கு வருமானத்தை ஏற்படுத்தித் தருவதுடன், மாதவிலக்கின் போது பெண் கைதிகள் சுகாதாரத்தை பேணவும் வழிவகுக்கும். சபர்மதி சிறையில் பெண்கள் தயாரிக்கும் நேப்கின்கள், குஜராத் மாநிலம் முழுவதும் சிறைகளில் உள்ள பெண் கைதிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
எதிர்காலத்தில் பெண் கைதிகள் தண்டனை முடிந்து வெளியில் வந்த பிறகு, அவர்கள் சுயமாக நேப்கின் தயாரித்து வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு பிரியன்ஷி படேல் கூறினார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT