Last Updated : 24 May, 2018 02:12 PM

 

Published : 24 May 2018 02:12 PM
Last Updated : 24 May 2018 02:12 PM

மோடி செய்த துரோகம்- சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாய்ச்சல்

பால்கல் தொகுதியின் முன்னாள் எம்பியான வனகா, மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை எதிர்த்தார் என்பதற்காக வனகாவையும், அவரின் குடும்பத்தினரையும் பாஜக புறக்கணித்தது துரோகம் இல்லையா என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் பால்கர் மக்களவை தொகுதியில் வரும் 28-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சிவசேனா சார்பில் சீனிவாஸ் வனகா போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக வாசி நகரில் நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

நம்முடைய பிரதமர் மோடி பதவிக்கு வந்ததில் இருந்து வெளிநாட்டுப் பயணத்திலேயே ஆர்வமாக இருக்கிறார். அங்கு போய் நாடு மாற்றமடைந்து வருகிறது என்று பேசுகிறார். பெரும்பாலும் நாட்டில் இல்லாத மோடி, மாநிலங்களில் தேர்தல் வரும்போது மட்டும் மக்கள் கண்களுக்கு தென்படுகிறார். தேர்தல் முடிந்துவிட்டால் மீண்டும் வெளிநாட்டுப்பயணத்தைத் தொடங்கிவிடுகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது, ‘நம்முடைய அரசு மோடி அரசு’ என்ற முழக்கத்தோடு பாஜக புறப்பட்டது, ஆனால், அடுத்த தேர்தலில், மிக கடுமையான எதிர்ப்பை அக்கட்சி சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய சொந்த தொகுதியான கோரக்பூரில் பல தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆனால், கடந்த இடைத் தேர்தலில் அந்தத் தொகுதியை அவரால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இப்போது எங்களின் கட்சித் தொண்டர்களுக்கு தேர்தலில் தோல்வி அடையக்கூடாதது குறித்து கற்றுத்தருகிறார்.

பாஜகவுக்குத் துரோகம் செய்துவிட்டதாக மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் எங்களை விமர்சித்து வருகிறார். ஆனால், பால்கல் தொகுதியின் முன்னாள் எம்பியான வனகா, மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தையும், டெல்லி-மும்பை தொழில்திட்டத்தையும், வத்வான் துறைமுக திட்டத்தையும் எதிர்த்தார் என்பதற்காக வனகாவையும், அவரின் குடும்பத்தினரையும் பாஜக புறக்கணித்தது. இது துரோகம் இல்லையா?.

மறைந்த எம்.பி. வனகாவின் மகன் சீனிவாஸ் வனகாவுக்கு நாங்கள் வாய்ப்பளித்து, தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்யும்வரை ஏன் அவரை பாஜக சென்றுபார்க்கவில்லை. வனகா குடும்பத்தினர் என்னிடம் வந்து கண்ணீர் வடித்தவுடன், மறைந்த வனகாவின் மகன் சீனிவாஸ் வனகாவையே வேட்பாளராக நியமதித்தோம். நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.

கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து மீட்டு வந்து மக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி வாக்களித்தார். அதை நிறைவேற்றாமல் இருக்கிறாரே மோடி, அது துரோகம் இல்லையா?

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x