Published : 29 May 2018 03:37 PM
Last Updated : 29 May 2018 03:37 PM
டெல்லியில் தன்னுடைய ஆட்சி மக்களுக்குச் செய்த நன்மைகளைக் குறிப்பிட்டும் மத்தியில் மோடியின் ஆட்சி மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலால் சித்தரிக்கப்பட்ட ஒரு கேலிச்சித்திரம் பரபரப்பாகியுள்ளது
தன் ட்விட்டர் பக்கத்தில் இந்தக் கார்ட்டூனை வெளியிட்டுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். அதாவது டெல்லியில் தனது ஆட்சியின் கீழ் கல்வி, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்டத் துறைகளின் திட்டங்களை குறிப்பிட்டு இன்னொரு பக்கம் வறண்ட ஒரு காலிமனையை அதன் வேலிகளுடன் போட்டு ‘கட்டுமானம் நடந்து கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டு கேலி செய்துள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால்.
ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ் மொஹல்லா கிளினிக், மலிவு மின்சாரம், இலவச நீர், இலவச மருத்துவம், நவீனமயமாக்கப்பட்ட அரசு பள்ளிகள் என்று ஒரு கட்டிடத்தில் ஒவ்வொரு அடுக்கிலும் குறிப்பிட்டுள்ள கேஜ்ரிவால் பக்கத்தில் வேலிகளுடன் கூடிய ஒரு வெற்று நிலத்தில் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன, என்று மோடி அரசைக் கேலி செய்துள்ளார்.
அதாவது ஆம் ஆத்மியின் சாதனைகள் உயரமான கட்டிடமாகவும் வெற்று நிலம் அல்லது பாழ்நிலம் மோடி அரசின் நடவடிக்கையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. உயரமான கட்டிடத்தில் குறிப்பிட்ட சாதனைகள் கீழ் இந்தியில் டெல்லி சர்க்கார் என்றும் பக்கத்தில் வெற்று நிலத்தில் ‘மத்திய சர்க்கார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் கேஜ்ரிவால்.
காவிரி பிரச்சினை போல் டெல்லி-ஹரியாணா பிரச்சினை:
பிரதமருக்கு அரவிந்த் கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தில், 1996ம் ஆண்டு முதல் டெல்லிக்கு ஹரியாணா 1,133 கன அடி தண்ணீர் வழங்கி வருகிறது. ஆனால் 22 ஆண்டுகள் நடைமுறையை ஒழிக்கும் விதமாக பகுதியளவு தண்ணீர் தருவதை ஹரியாணா நிறுத்தியுள்ளது.
ஹரியாணா தண்ணீர் தருவதை நிறுத்தினால் டெல்லியில் கடும் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்று கேஜ்ரிவால் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கேஜ்ரிவால் அரசுக்கு ஆளும் பாஜக பல்வேறு விதங்களில் நெருக்கடி அளித்து வருவது அறிந்ததே. தற்போது நீராதரப் பிரச்சினையும் ஏற்படும் என்ற ஐயம் எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT